தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகை; நாமக்கல் மாவட்டத்தில் 109 மாணவர் தேர்ச்சி
தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகை; நாமக்கல் மாவட்டத்தில் 109 மாணவர் தேர்ச்சி
UPDATED : மார் 20, 2026 05:46 PM
ADDED : மார் 20, 2026 05:46 PM
நாமக்கல்:
தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகை தேர்வில், நாமக்கல் மாவட்டத்தில், 109 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு (என்.எம்.எம்.எஸ்.,) என்பது, மத்திய அரசின் திட்டம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை மாதம் தோறும், 1,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்க, திறனறி தேர்வு மூலம் மாணவர்களை தேர்ந்தெடுக்கும் போட்டி தேர்வாகும். அதன்படி, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு, மாநிலம் முழுவதும் கடந்த ஜன., 10ல் நடந்தது.
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு, கொல்லிமலை, ராசிபுரம், குமாரபாளையம், சேந்தமங்கலம் ஆகிய தாலுகாவில், 15 மையங்களில் தேர்வு நடந்தது. அதில், 3,925 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அவர்களுக்கான தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது. மாவட்டத்தில் இத்தேர்வை எழுதிய, 109 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்று, உதவித்தொகை பெறும் தகுதியை பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு, 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை மாதம்தோறும், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இதில், கொல்லிமலை குண்டனி நாடு பஞ்., நடுநிலைப் பள்ளி மாணவியர் கவுசிகா, 112 மதிப்பெண், ரித்திகா, 96 மதிப்பெண் பெற்று, உதவித்தொகை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவியரை, தலைமையாசிரியர் (பொறுப்பு) பூவரசன் பாராட்டினார்.
