இளம் வடிவமைப்பாளர் போட்டி முதலிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு
இளம் வடிவமைப்பாளர் போட்டி முதலிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு
UPDATED : அக் 02, 2024 12:00 AM
ADDED : அக் 02, 2024 09:24 AM
கரூர்:
இளம் வடிவமைப்பாளர்களுக்கான போட்டியில், முதலிடம் பிடித்த கரூர் மாணவிக்கு, கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது. ஓய்வூதியம், வங்கி கடன், இலவச வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், ரேஷன் அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்றவை கேட்டு மொத்தம், 504 மனுக்கள் பெறப்பட்டது. மாற்றுத்திறனாளிகளிடம், 59 மனுக்கள் பெறப்பட்டது.
கைத்தறி துறை சார்பாக, இளம் வடிவமைப்பாளர்களை உருவாக்கும் வகையில், போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி, 2023--24ம் ஆண்டு இளம் வடிவமைப்பாளர்களுக்கான போட்டியில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த வள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவி தர்ஷனா, மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு பொன்னாடை அணிவித்து கலெக்டர் தங்கவேல் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார். கூட்டத்தில் , டி.ஆர்.ஓ., கண்ணன், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஸ், உதவி இயக்குனர் (கைத்தறி) சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.