புதுச்சேரி எழுத்தாளர்களின் புத்தகங்களை நுாலகங்களுக்கு கொள்முதல் செய்ய முடிவு
புதுச்சேரி எழுத்தாளர்களின் புத்தகங்களை நுாலகங்களுக்கு கொள்முதல் செய்ய முடிவு
UPDATED : டிச 21, 2024 12:00 AM
ADDED : டிச 21, 2024 11:11 AM

புதுச்சேரி:
புதுச்சேரி எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் நுாலகங்களுக்கு கொள்முதல் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து கலை பண்பாட்டு துறை இயக்குநர் கலியபெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத் துறையானது நுாலக வாசகர்களுக்காக பல்வேறு தலைப்பிலான புத்தகங்களை கொள்முதல் செய்து வருகிறது. அதன் அடிப்படையில் புதுச்சேரி எழுத்தாளர்களிடமிருந்து அவர்கள் எழுதிய புத்தகங்களை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, புதுச்சேரி எழுத்தாளர்கள் தங்களது புத்தகங்கள் குறித்த தகவலை சமர்ப்பிக்கலாம். கொள்முதலுக்கு அனுப்பப்படும் நுால்கள் அனைத்தும் 2023, 2024ம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்கள் மீண்டும் நுாலகங்களுக்கு வாங்கப்படாது.
கொள்முதல் செய்யப்படும் புத்தகங்களுக்கு குறைந்தபட்சம் 15 சதவீதம் கழிவு அளிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் மாதிரி புத்தகம் இணைக்கப்பட வேண்டும். ஒரு எழுத்தாளரிடமிருந்து அதிகபட்சமாக இரண்டு தலைப்புகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படும்.
விண்ணப்பதாரர் புதுச்சேரியில் பிறந்தவராகவோ ஐந்தாண்டுகள் புதுச்சேரியில் குடியிருப்பு உடையவராகவோ இருத்தல் வேண்டும். விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளின் நகலை நேரில் அல்லது https://art.py.gov.in எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 31ம் தேதிக்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.