UPDATED : அக் 14, 2025 07:24 AM
ADDED : அக் 14, 2025 07:28 AM
கோவை:
'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ் கல்விக் குழுமம் இணைந்து நேற்று நடத்திய, 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்கள், அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
மாணவர்களின் கற்றல் ஆர்வத்தையும், நுண்ணறிவு திறன்களையும் ஊக்குவித்து, படிப்பின் மீது ஆர்வத்தை விரிவுபடுத்தும் வகையில், இத்தகைய வினாடி-வினா போட்டிகள், 'தினமலர்' நாளிதழ் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு, எஸ்.என்.எஸ் கல்விக் குழுமம் இணைந்து நடத்தும் வினாடி-வினா போட்டிக்கு, சத்யா ஏஜென்சிஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் லேண்ட் ஆகியவை, கிப்ட் ஸ்பான்சர்களாக இணைந்துள்ளன.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த 150க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், போட்டியில் பங்கேற்கின்றனர். பள்ளி அளவில் முதலிடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு தேர்வு செய்யப்படுவர். அதிலிருந்து தேர்வாகும் எட்டு அணியினர் இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
இந்நிலையில், ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள கதிரி மில்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நேற்று வினாடி-வினா போட்டி நடைபெற்றது. இதில், தகுதி சுற்றில் 362 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ, மாணவிகள் எட்டு அணிகளாக பிரிந்து இறுதிப்போட்டியில் கலந்துகொண்டனர்.
மூன்று சுற்றுகளாக நடைபெற்ற இறுதிப்போட்டியில், 35 மதிப்பெண்கள் பெற்று 'ஹெச்' அணி வெற்றி பெற்றது. அணியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஸ்ரீராம் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவி வித்யா காயத்ரி ஆகியோர், முதல் பரிசை தட்டிச்சென்றனர்.
இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பள்ளி முதல்வர் மேனகா வழங்கினார்.