கல்லுாரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கியது ஏன்? பழனிசாமிக்கு அமைச்சர்கள் விளக்கம்
கல்லுாரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கியது ஏன்? பழனிசாமிக்கு அமைச்சர்கள் விளக்கம்
UPDATED : பிப் 19, 2026 11:49 AM
ADDED : பிப் 19, 2026 11:50 AM
சென்னை:
கல்லுாரி மாணவர்களுக்கு, கடைசி நேரத்தில், 'லேப்டாப்' வழங்கியது குறித்து, சட்டசபையில் காரசார விவாதம் நடந்தது.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., கே.பி.முனுசாமி: கல்லுாரி படிப்பை முடிக்கும் நேரத்தில், 10 லட்சம் மாணவர்களுக்கு 'லேப்டாப்' வழங்குகிறீர்கள்.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு: மாணவர்களின் ஓட்டுகளை வாங்க, இந்த திட்டம் கொண்டு வந்ததை போல சொல்கிறீர்கள். கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, மாதம் 2,000 ரூபாயை வழங்குகிறோம். அவர்கள் ஓட்டுரிமை வைத்துள்ளனரா?
அமைச்சர் சுப்பிரமணியன்: மாவட்டத்திற்கு ஒரு மருத்துவமனை என்ற திட்டத்தை, கருணாநிதி முதல்வராக இருந்த போது முன்மொழிந்தார். அதன் தொடர்ச்சியாக, உங்கள் ஆட்சியில் மருத்துவமனைகள் துவக்கப்பட்டன. நீங்கள் கொண்டு வந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு கோப்பு, கவர்னர் மாளிகையில் துாங்கிக் கொண்டிருந்தது. அதை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தவர் முதல்வர் ஸ்டாலின்.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: உண்மைக்கு மாறான கருத்தை சொல்கிறார். இது என்ன பொதுக்கூட்டமா? சட்டசபையில் அமைச்சர் பொறுப்பாக பேச வேண்டும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவக் கல்வி இட ஒதுக்கீட்டை தி.மு.க., பெற்றுதந்தது என, எந்த பத்திரிகையிலாவது, செய்தி வந்ததை காட்ட முடியுமா? மாணவர்களுக்கு 'லேப்டாப்' கொடுப்பதை, நாங்கள் குறைசொல்லவில்லை.
அது அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த திட்டம். கொடுப்பதை குறித்த காலத்தில் கொடுத்திருக்க வேண்டும் என்று தான் சொல்கிறோம்.
அமைச்சர் வேலு: மாணவர்கள் கல்லுாரி படிப்பை முடித்து, விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களாக வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காகவே, 'லேப்டாப்' கொடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
அமைச்சர் சுப்பிரமணியன் பேசும் போது, அவர் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து நின்று கோஷம் போட்டனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, சபாநாயகர் அப்பாவு எச்சரித்தார். பழனிசாமி பேச 'மைக்' இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால், சபையில், 20 நிமிடங்களுக்கு மேல் சலசலப்பு எழுந்தது.
அமைச்சர் சுப்பிரமணியன் குறித்து, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்த ஒரு கருத்தை, சபை குறிப்பில் இருந்து, சபாநாயகர் நீக்கினார்.

