UPDATED : மார் 03, 2026 11:29 AM
ADDED : மார் 03, 2026 11:32 AM

“அரசியல் ரீதியாக ஒரே நாடாக நாம் இல்லாவிட்டாலும், கலாசார ரீதியாக, பண்பாட்டு ரீதியாக, நாம் ஒரே நாடாக தான் இருந்து வந்துள்ளோம். ராம பிரானுடைய கதை, குக்கிராமம் வரை, இந்தியா முழுவதும் பரவி இருக்கிறது. தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் ராம வழிபாடு உள்ளது. ஆக, நாம் கலாசார ரீதியாக, என்றைக்கும் ஒரே நாடாக தான் இருந்திருக்கிறோம்,” என, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழக கோவில்களின் வரலாறு, கட்டடக்கலை, பண்டைய வரலாறு உள்ளிட்டவற்றை விளக்கும் வகையில், 14 தமிழ் நூல்கள், டில்லியில் வெளியிடப்பட்டன.
வெளியீட்டு நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
எந்த ஒரு நல்ல செயலுமே போற்றப்படுகின்ற போது, அது போன்ற நல்ல செயல்கள் மேலும் அதிகரிக்கும். நல்ல செயல்களை போற்றும் சமுதாயம் தான், நல்லொழுக்கம் மிக்க, நல்ல சிந்தனையுள்ள, எல்லாருக்குமான சமுதாயமாக மாறும். அதனால், சிறு துளியாக இருந்தாலும், அது நல்லது என்று சொன்னால் கூட, அதை போற்றும் மனோ பக்குவத்தை பெற்றவராக நாம் இருக்க வேண்டும்.
தமிழகத்தில்...
'இந்தியா ஒரு போதும் ஒன்றாக இருந்ததில்லை. இந்தியா ஒரு போதும், ஒரு அரசியல் நாடாக இருந்தது இல்லை, ஆங்கிலேயர்கள் தான் இந்தியாவை உருவாக்கினர்' என்று தமிழகத்தில் அடிக்கடி கூறப்படுகிறது.
ஆனால் ஒன்றை சொல்ல மறந்து விடுகின்றனர். அதாவது, தமிழகமும் கூட, என்றைக்கும் ஒரே அரசியல் நாடாக இருந்தது இல்லை. அது சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, கொங்கு நாடு என்று தான் இருந்தது.
ஆக, அரசியல் ரீதியாக ஒரே நாடாக நாம் இல்லாவிட்டாலும், கலாசார ரீதியாக, பண்பாட்டு ரீதியாக, நாம் ஒரே நாடாகத் தான் இருக்கிறோம். ராம பிரானுடைய கதை, குக்கிராமம் வரை, இந்தியா முழுவதும் பரவி இருக்கிறது. தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் ராம வழிபாடு உள்ளது. ஆக, நாம் கலாசார ரீதியாக, என்றைக்கும் ஒரே நாடாகத்தான் இருந்திருக்கிறோம்.
ஏதோ, ஜாதிக்கு எதிராக பேசுவதை இப்போது தான், இந்த மண்ணில் தோன்றி இருக்கிறது என்று நினைக்கிறோம். தவறு. பிறப்பை வைத்து, மனிதனை தாழ்வாக நினைக்க கூடாது என்பதை, தமிழ் மண்ணில், முதல் முறையாக ஓங்கி ஒலித்த ஒரு குரல் உண்டு என்று சொன்னால் அது ராமானுஜரின் குரல். இது பலருக்கும் தெரியாதது விசித்திரம் .
காலமாக இருந்து வந்த ஏற்றத்தாழ்வுகளை, யாருமே தட்டிக் கேட்கவில்லை என்பதை போல, இப்போது பலரும் பேசுகின்றனர்.
ராமானுஜர் ராமானுஜர் தான், தெள்ளத் தெளிவாக சொன்னார் மேலகோட்டை கோவிலை அமைத்தவுடன், அந்த கோவில் வேலை செய்தவர்கள் நாங்கள் உள்ளே வரக் கூடாதுன்னு சொல்கின்றனர் என்று கூறிய போது, 'இறைவனுடைய படைப்பில் பேதம் இல்லை, இந்த கோவிலை உருவாக்கிய நீங்கள் உள்ளே வரக்கூடாது என்றால், நானும் உள்ளே போவதற்கு தகுதியற்றவன்' என்று சொல்லிவிட்டு, அவர்களையும் அழைத்துக்கொண்டு, அந்த மேலக்கோட்டை கோவிலுக்குள் சென்றார். இது போன்ற மகத்தான ஞானிகள் இந்த மண்ணில் இருந்துள்ளனர்.
தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவுவதற்கு குஜராத்திலிருந்து ஒருவர் வர வேண்டியிருக்கிறது. தாய்மொழியான குஜராத்தியைப் பற்றிக்கூட அவர் பேசியதை நான் பார்த்தில்லை. தமிழைப் பற்றி தான் போகிற இடமெல்லாம் புகழ்கிறார் பிரதமர் மோடி.
இவ்வாறு அவர், பேசினார்.

