டி.சி., கொடுத்த மாணவர்களை மீண்டும் சேர்க்க அரசு மும்முரம்
டி.சி., கொடுத்த மாணவர்களை மீண்டும் சேர்க்க அரசு மும்முரம்
UPDATED : மார் 13, 2026 04:24 PM
ADDED : மார் 13, 2026 04:31 PM

ஓண்டிபுதூர்:
ஓண்டிபுதூர் அரசு ஆண்கள் பள்ளியில் டி.சி., பெற்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
இப்பள்ளியில், ஜூன் முதல் டிசம்பர் வரை, 49 மாணவர்களுக்கு டி.சி., வழங்கப்பட்டுள்ளது. தலைமையாசிரியர் வற்புறுத்தலால் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக, பிளஸ் 1 மாணவர்கள் 23 பேர் டி.சி., பெற்றுள்ளனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டார். தலைமையாசிரியர் யாரையும் வற்புறுத்தவில்லை என ஆசிரியர்கள் கூறியுள்ளனர். குறுகிய காலத்தில் இத்தனை மாணவர்கள் ஏன் வெளியேறினர் என்ற கேள்விக்கு பதில் இல்லை.
பிளஸ் 2 படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவரை, வகுப்பறையை சுத்தம் செய்ய சொல்லி தலைமை ஆசிரியர் வற்புறுத்தியதாக மற்றொரு புகாரும் முளைத்துள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மாணவர்களிடம் விசாரணை நடத்தாமல், ஆசிரியர்களிடம் கேட்டால் உண்மை எப்படி வெளிவரும்? 'எமிஸ்' இணையதளத்தில் மாணவர்களின் வருகை முதல் கல்வி செயல்பாடுகள் வரை அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது. அப்படி இருக்கையில், 49 மாணவர்கள் வெளியேறியது அதிகாரிகள் பார்வைக்கு தப்பியது எப்படி? இடைநிற்றலை தடுக்க வேண்டிய பள்ளி நிர்வாகமே, மாணவர்களை வெளியேற்றுவது அதிர்ச்சி அளிக்கிறது, என்றனர்.
மீண்டும் சேர்க்கப்படுவர் தொண்டாமுத்தூர் தனியார் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு டி.சி., வழங்கியது சர்ச்சையானது.
தற்போது அரசு பள்ளியிலும் இது எதிரொலித்துள்ளது குறித்து கலெக்டர் பவன்குமாரிடம் கேட்ட போது, காரணத்தை அறிய விசாரணை நடக்கிறது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். டி.சி., பெற்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

