பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு கோடை விடுமுறையால் மாணவர்கள் குதுாகலம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு கோடை விடுமுறையால் மாணவர்கள் குதுாகலம்
UPDATED : ஏப் 03, 2026 06:35 PM
ADDED : ஏப் 03, 2026 06:36 PM
நாமக்கல்:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன் முடிந்தது. தொடர்ந்து விடுமுறை என்பதால், மாணவ, மாணவியர் குதூகலித்தனர்.
தமிழகத்தில், பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு, கடந்த மார்ச், 11ல் தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தில், 92 மையங்களில் நடந்த தேர்வில், அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளை சேர்ந்த, 9,817 மாணவர், 8,851 மாணவியர் என, மொத்தம், 18,668 பேர் பங்கேற்றனர்.
மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்கள், 322 பேரில், 265 பேருக்கு சொல்வதை எழுதுபவர் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்விற்கு, 92 முதன்மை கண்காணிப்பாளர்கள், 92 துறை அலுவலர்கள், ஒரு கூடுதல் துறை அலுவலர், 240 பறக்கும் படை உறுப்பினர்கள், வழித்தட அலுவலர்கள், 24, வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் 3, அறை கண்காணிப்பாளர்கள், 1,300 பேர் என, மொத்தம், 1,752 பேர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அதே போல், தேர்வு மையங்களை பார்வையிட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை, தனியார் பள்ளிகள், தொடக்கக் கல்வி), அரசு தேர்வு உதவி இயக்குனர்
தலைமையிலும் குழு அமைத்து தேர்வு மையங்களை பார்வையிடப்பட்டது. இந்நிலையில், நேற்று கடைசி தேர்வாக சமூக அறிவியல் பாடத்திற்கான தேர்வு நடந்தது. நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மையத்தில், பத்தாம் வகுப்பு தேர்வு நிறைவு பெற்றதை தொடர்ந்து விடுமுறை என்பதால், மாணவியர் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
மேலும், விடுமுறை தொடங்கியதை வெளிப்படுத்தும் வகையில், தங்களது கட்டை விரலை 'தம்ஸ்அப்' காட்டி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், 'செல்பி' எடுத்தும் மகிழ்ந்தனர். நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் சிலர் சட்டைகளில் மை தெளித்து, உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

