பொது துறைகளில் ‛ட்ரோன் பயிற்சி: சங்கரா கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
பொது துறைகளில் ‛ட்ரோன் பயிற்சி: சங்கரா கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
UPDATED : ஏப் 09, 2026 12:40 PM
ADDED : ஏப் 09, 2026 12:41 PM

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பொது துறைகளில் ‛ட்ரோன்' பயிற்சிகளை அளிப்பதற்கு ‛ஹெர்வெல் ஏவியேசன்' என்ற நிறுவனத்துடன் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவ, மாணவியரின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோராக ஊக்குவிப்பதற்கும், பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக நவீன விவசாயத்திற்கும் மற்றும் பொழுதுபோக்கு துறையில் பயன்படுத்தப்படும் ‛ட்ரோன்' படிப்புகளை அறிமுகம் செய்வதற்காக ‛ஹெர்வெல் ஏவியேசன்' என்ற நிறுவனத்துடன் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன், உலகெங்கிலும் விவசாய துறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் மற்றும் நம் நாட்டில் பயன்படுத்தப்பட்டு வரும் விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்களில் ‛ட்ரோன்' பயன்பாடு குறித்தும், நவீன விவசாயம் மட்டுமல்லாது பொழுதுபோக்கு மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்தும் பேசினார்.
‛ஹேர்வெல் ஏவியேசன்' சார்பில், நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மேகநாதன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கல்லுாரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கல்லுாரியின் வேலை வாய்ப்பு பிரிவு அலுவலர் வினுசக்கரவர்த்தி நன்றி கூறினார்.

