அரசு மருத்துவக் கல்லுாரியில் முதுநிலை மாணவர்கள் சேர்க்கை இந்தாண்டு துவக்கம்
அரசு மருத்துவக் கல்லுாரியில் முதுநிலை மாணவர்கள் சேர்க்கை இந்தாண்டு துவக்கம்
UPDATED : ஏப் 16, 2026 07:22 PM
ADDED : ஏப் 16, 2026 07:23 PM
விருதுநகர்:
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி, மருத்துவமனைக்கு நடப்பாண்டு முதுநிலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கை துவங்கவுள்ளது. இதனால் நோயாளிகளுக்கு சிரமமில்லா மருத்துவம் கிடைக்கும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி, மருத்துவமனையில் நோயாளிகளின் வருகை அதிகரிப்பால் தற்போது 1250 படுக்கைகளாக உயர்த்தப்பட்டு செயல்படுகிறது. இங்கு வெளிநாட்டில் மருத்துவம் முடித்து பயிற்சி பெறுவதற்காக வந்துள்ள டாக்டர்களில் 15 பேர் மட்டுமே தற்போது உள்ளனர். இவர்களும் பயிற்சி முடித்து தங்கள் சொந்த ஊர்களுக்கு விரைவில் செல்ல உள்ளனர்.
இந்நிலையில் மகப்பேறு, மயக்கவியல் உள்பட பல்வேறு துறைகளில் மொத்தம் 32 முதுநிலை மருத்துவ இடங்கள் வழங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடப்பாண்டில் விரைவில் துவங்கப்படவுள்ளது.
இதனால் வெளிநாட்டில் மருத்துவம் முடித்து அரசு மருத்துவக் கல்லுாரிகளில் பயிற்சி முடித்தவர்கள் வெளியேறினாலும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் வருகையால் நோயாளிகளுக்கான சிகிச்சை விரைவாக கிடைக்கும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

