தனியார் பள்ளிகளில் மத நிகழ்ச்சிகள் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
தனியார் பள்ளிகளில் மத நிகழ்ச்சிகள் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
UPDATED : ஏப் 17, 2026 05:36 PM
ADDED : ஏப் 17, 2026 05:37 PM

சென்னை:
தமிழகத்தில், தனியார் பள்ளி வளாகங்களில், அரசியல் சித்தாந்த, மத ரீதியிலான நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்ற அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க, சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ், 12,000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில், ஜாதி, மதம் சார்ந்த நிகழ்வுகள் நடத்தப்படுவதால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்கும் வகையில், தனியார் பள்ளிகள் சட்ட விதிகளில், கடந்த மார்ச்சில் சில திருத்தங்கள் செய்து, அது குறித்த விபரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டன.
அதில், 'பள்ளி வளாகத்தை அரசியல், கருத்தியல், வகுப்புவாத, பிரிவினைவாத மற்றும் கல்வி நோக்கமற்ற நிகழ்ச்சி, கூட்டம், பிரசாரம் நடத்த பயன்படுத்தக் கூடாது. அரசின் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் என்று, ஆண்டுதோறும் ஏப்., 30ம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் உத்தரவாதம் வழங்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அரசின் இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலுாரில் உள்ள சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தேனியை சேர்ந்த ஸ்ரீகாமராஜ் வித்யாலயா தொடக்கப் பள்ளி சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, தனியார் பள்ளிகள் தரப்பில், “அரசின் உத்தரவு சட்டவிரோதமானது. அடிப்படை உரிமைகளை மீறியது.
பள்ளி விடுமுறை நாட்களிலும், பள்ளி நேரம் முடிந்த பின்னும் நிகழ்ச்சிகள் நடத்த ஒட்டுமொத்தமாக தடை விதித்தது தவறு. அரசின் உத்தரவை அமல்படுத்துவதாக உத்தரவாதம் அளிக்காவிட்டால், பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்பதால், அரசு உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என, வாதிடப்பட்டது .
இதையடுத்து நீதிபதிகள், தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்தனர். அதே நேரத்தில், அரசின் உத்தரவை அமல்படுத்துவது குறித்து உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற பிரிவுக்கு மட்டும், இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும், மனு தொடர்பாக, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, ஜூன் 15ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

