ஆட்டிசம் பாதிப்பு குழந்தைகள் சேர்ப்பு; அரசு பள்ளிகளில் அறிவிப்பு பலகை
ஆட்டிசம் பாதிப்பு குழந்தைகள் சேர்ப்பு; அரசு பள்ளிகளில் அறிவிப்பு பலகை
UPDATED : ஏப் 18, 2026 10:25 AM
ADDED : ஏப் 18, 2026 10:27 AM

சென்னை:
'ஆட்டிசம் மற்றும் அறிவுசார் குறைபாடு உள்ள குழந்தைகள், பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்று பள்ளியில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
எந்த ஒரு கல்வி நிறுவனமும், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்வியை மறுக்கக்கூடாது என, மாற்றுத்திறனாளிகள் சட்டம் 16, 17 பிரிவுகள் வலியுறுத்துகின்றன. அதே போல், தேசிய அறக்கட்டளை சட்டம், ஆட்டிசம், மூளை முடக்குவாதம், அறிவுசார் குறைபாடு உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை சட்டப்பூர்வமாக்கி உள்ளது.
அதே போல், எவரையும் விட்டுவிடாத பொதுக்கல்வி என்ற கருத்தை, அனைவருக்கும் கல்வி இயக்கம் வலியுறுத்துகிறது. அத்துடன், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வியை பாதுகாக்கும் வகையில், சிறப்பு பயிற்றுனர்களை நியமிப்பதையும் வலியுறுத்துகிறது.
ஆனாலும், பல பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பொதுப்பள்ளிகளில் ஆட்டிசம் மற்றும் அறிவுசார் குறைபாடுள்ள குழந்தைகளை சேர்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதை தவிர்க்கும்படி, தொடக்கக் கல்வித் துறை சார்பில், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
'ஆட்டிசம்' பாதிப்புள்ளவர்களுக்கான சிறப்பு மையத்தின், தலைமை செயல் அதிகாரி உத்தரவின்படி, தலைமை ஆசிரியரின் முன்புள்ள சுவரில், பொதுமக்கள் மற்றும் பெற்றோர் பார்வையில்படும்படி, 'அறிவுசார் குறைபாடு மற்றும் ஆட்டிச நிலை குழந்தைகள், பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படுவர்' என, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
இது தொடர்பான அறிக்கையை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஆட்டிசம் பாதிப்புள்ளோருக்கான சிறப்பு மையத்தின், தலைமை செயல் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

