ஜிப்மரில் தேசிய மருத்துவ மாநாடு: ஆரோக்கியம் குறித்து நிபுணர்கள் ஆலோசனை
ஜிப்மரில் தேசிய மருத்துவ மாநாடு: ஆரோக்கியம் குறித்து நிபுணர்கள் ஆலோசனை
UPDATED : ஏப் 27, 2026 06:56 PM
ADDED : ஏப் 27, 2026 06:58 PM

புதுச்சேரி:
ஜிப்மர் வளாகத்தில் சர்வதேச மருத்துவ அறிவியல் அகாடமியின் 41வது தேசிய மாநாடு நடந்தது.
ஒரே ஆரோக்கியம் என்ற கருப்பொருளில் நடந்த இந்த மாநாட்டில் மருத்துவ உலகின் நவீன முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மாநாட்டை ஜிப்மர் பொறுப்பு இயக்குநர் காதம்பரி துவங்கி வைத்து, பேசுகையில், 'மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய மூன்றின் ஆரோக்கியத்தையும் ஒருங்கிணைந்த முறையில் அணுகுவதன் மூலமே எதிர்கால சுகாதார சவால்களை எதிர்கொள்ள முடியும்' என்றார்.
முன்னாள் இயக்குநர் பரிஜா, மருந்துகளுக்குக் கட்டுப்படாத கிருமிகளின் அச்சுறுத்தல் குறித்து மருத்துவ துறை வல்லுநர்களுடன் கலந்துரையாடினார். டாக்டர்கள் ஜெகதீசன், துக்ரால் மருத்துவ கல்வி, ஆராய்ச்சி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.
மருத்துவத் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக மருத்துவர்கள் பழனிவேல், மோகன், தியாகராஜன், பேராசிரியர் சண்முகம் ஆகியோருக்கு சர்வதேச உரை விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.
சிறப்பு அமர்வுகளில் புற்றுநோய், தொற்று நோய்கள் மற்றும் மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு குறித்து தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள் விவாதித்தனர். உறுப்பினர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ஜிப்மர் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்கள், நிர்வாகிகள் செய்திருந்தனர்.

