கோவையில் கீழடிக்கு முந்தைய காலகட்ட எலும்புக்கூடு, கடல் சங்கு கண்டெடுப்பு
கோவையில் கீழடிக்கு முந்தைய காலகட்ட எலும்புக்கூடு, கடல் சங்கு கண்டெடுப்பு
UPDATED : மே 04, 2026 04:09 PM
ADDED : மே 04, 2026 04:10 PM
தொண்டாமுத்துார்:
தஞ்சாவூர் தமிழ் பல்கலை தொல்லியல் துறையினர், கோவையில் நடத்திய ஆய்வில், கீழடிக்கு முந்தைய காலகட்ட மனிதர்களின் முழு எலும்புக்கூடு மற்றும் பல்வேறு புதிய கற்கால பொருட்களை கண்டுபிடித்துள்ளனர்.
அகழ்வாராய்ச்சி
கோவை மாவட்டம், பூலுவபட்டி அடுத்த மோளப்பாளையம் கிராமத்தில் உள்ள மூலக்காடு பகுதியில், தஞ்சாவூர் தமிழ் பல்கலை கடல்சார் தொல்லியல் மற்றும் பண்டைய கால வரலாற்று துறை தலைவர் பேராசிரியர் செல்வகுமார் தலைமையிலான குழுவினர், 2021 மற்றும் 2024ம் ஆண்டு என, இரு முறை அகழ்வாராய்ச்சி மேற்கொண்டனர். இதில், பல்வேறு புதிய கற்கால பொருட்கள், மனிதர்களின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன.
கற்கோடாரி
இந்நிலையில், பேராசிரியர் செல்வகுமார் மற்றும் 85 முதுகலை மாணவர்கள் அடங்கிய குழுவினர், 47 நாட்களாக மூன்றாவது முறையாக இப்பகுதியில், அகழாய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில், கீழடிக்கு முந்தைய காலகட்ட புதிய கற்கால பொருட்கள் மற்றும் இரு குழந்தைகளின், முழு எலும்புக்கூடுகளையும் கண்டெடுத்துள்ளனர்.
பேராசிரியர் செல்வகுமார் கூறியதாவது:
மோளப்பாளையத்தில் உள்ள தொல்லியல் இடம், புதிய கற்கால மக்களின் வாழ்விடமாக அமைந்துள்ளது. கி.மு., 1,600 முதல் 1,200க்கு இடைப்பட்ட காலம் என்பது ஆய்வகத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்று புறமும் மலைகள் சூழ்ந்து அமைந்துள்ள இந்த இடத்தில், பல குழி வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குழியில் பானைகள் வைப்பதற்கான அடுக்குகளையும் உருவாக்கியுள்ளனர். தற்போது இரண்டு குழந்தைகளின் முழு எலும்புக்கூடுகளை கண்டெடுத்துள்ளோம். அதோடு, மான், ஆமை, ஆடு, மாடு போன்றவற்றின் எலும்புகள் கிடைத்துள்ளன. காண்டாமிருகத்தின் கால் எலும்பும் கிடைத்துள்ளது.
இந்த குழிகளில், அம்மி போன்ற அரவை கற்கள், தானியங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில், தங்களுக்கு தேவையான உணவுகளை தயாரித்துள்ளனர். விலங்குகளின் மாமிசத்தையும் உண்டுள்ளனர். கற்கோடாரிகளை உருவாக்கியுள்ளனர். கால்நடை மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டதும் உறுதியாகியுள்ளது. இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், கீழடிக்கு முந்தைய காலகட்டத்தை சேர்ந்தவை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
