கல்வித்துறையில் உடனடி சீர்திருத்தம் அவசியம்: முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கோரிக்கை
கல்வித்துறையில் உடனடி சீர்திருத்தம் அவசியம்: முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கோரிக்கை
UPDATED : மே 05, 2026 09:55 PM
ADDED : மே 05, 2026 09:58 PM

கோவை:
தமிழக சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ள த.வெ.க., தலைவர் விஜயை வாழ்த்திய முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, துணைவேந்தர் இல்லாத பல்கலைகள், பேராசிரியர் பற்றாக்குறை உட்பட உயர்கல்வித் துறையில் நிலவிவரும் பிரச்சனைகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என, வலியுறுத்தியுள்ளார்.
அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக சட்டமன்ற தேர்தலில் சிறப்பான வெற்றியை பெற்ற த.வெ.க., தலைவர் விஜய்க்கு வாழ்த்துகள். இந்த வெற்றி, இளைஞர்கள் உட்பட மக்கள் உங்கள் தலைமையின் கீழ் வைக்கப்பட்டுள்ள பெரும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
இந்த முக்கியமான தருணத்தில், தமிழக கல்வித் துறையில், முக்கியமாக, உயர் கல்வித்துறையில் நிலவிவரும் அவசரமான சவால்களை கவனத்திற்கு கொண்டு வருகிறேன். கல்வித்தர சேதம், தொழில்திறன் குறைபாடுகள், பேராசிரியர் பற்றாக்குறை, காலத்திற்கேற்ப இல்லாத பாடங்கள், ஆராய்ச்சி மற்றும் புதுமை வளர்ச்சியின் குறைவு போன்ற பல்வேறு பிரச்சனைகள் உடனடியாக சரி செய்ய வேண்டியுள்ளது.
மாநில பல்கலைகளில் துணைவேந்தர் பதவிகள் நீண்ட காலமாக காலியாக இருப்பது மிகுந்த கவலைக்குரியது. இத்தகைய காலிப் பணியிடங்கள் கல்வி நிர்வாகம், கொள்கை முடிவுகள், நிறுவன வளர்ச்சி மற்றும் கல்வித் தரம் ஆகியவற்றை தீவிரமாக பாதித்து வருகின்றன. பல்கலைகள் திறம்பட செயல்பட வலுவான தலைமை அவசியம் தேவை.
ஆகவே, அனைத்து பல்கலைகளிலும் தகுதியும் திறமையும் கொண்ட துணைவேந்தர்களை விரைவாக நியமிக்க, தேவையான உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும், பாடத்திட்ட மேம்பாடு, பேராசிரியர் திறன் வளர்ச்சி, தொழில்கல்வி இணைப்பு, ஆராய்ச்சி ஊக்குவிப்பு உள்ளிட்ட துறைகளின் விரிவான சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும். இதன் வாயிலாக, தமிழ்நாடு மீண்டும் கல்வித்துறையில் முன்னணி மாநிலமாக திகழ முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
