பள்ளி நிர்வாகக்குழு தலைவர் தேர்வு மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு
பள்ளி நிர்வாகக்குழு தலைவர் தேர்வு மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு
UPDATED : மே 08, 2026 08:44 AM
ADDED : மே 08, 2026 08:57 AM

சென்னை:
'பள்ளி நிர்வாகக்குழுவின் தலைவர் மற்றும் துணை தலைவரை, பெற்றோர் அல்லது பாதுகாவலர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்' என, மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கைக்கு உட்பட்டு, பள்ளி நிர்வாகக்குழுவை தேர்வு செய்வது குறித்து, மத்திய கல்வி அமைச்சகம், வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
ஒரு பள்ளியின் முதல்வராகவோ, தலைவராகவோ இருப்பவர், கல்விக்குழு மற்றும் பள்ளிக் கட்டடக்குழு ஆகிய, இரண்டு துணை குழுக்களுக்கு, உறுப்பினர் செயலராக இருக்க வேண்டும். புதிய கல்விக்கொள்கையை பின்பற்றி, ஒவ்வொரு பள்ளியிலும், ஒரு மேலாண்மைக்குழு செயல்பட வேண்டும்.
அதில், உள்ளாட்சி அமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள், ஆசிரியர்கள் ஆகியோர், கட்டாயம் இருக்க வேண்டும்.
நுாறு மாணவர்களுக்கு 12 பேர் என்ற அடிப்படையில், குழுவில் உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அதிலும், உறுப்பினர்களில் நான்கில் மூன்று பங்காவது, பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் இருக்க வேண்டியது கட்டாயம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
