முப்படை புதிய தலைமை தளபதியாக தமிழர் ராஜா சுப்ரமணி நியமனம்
முப்படை புதிய தலைமை தளபதியாக தமிழர் ராஜா சுப்ரமணி நியமனம்
UPDATED : மே 10, 2026 09:49 PM
ADDED : மே 10, 2026 09:52 PM

புதுடில்லி:
நம் நாட்டின் முப்படை தலைமை தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார். புதிய கடற்படை தளபதியாக தமிழர் கிருஷ்ணா சுவாமிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றிற்கு தனித்தனியாக தளபதிகள் உள்ள நிலையில், அவர்களை ஒருங்கிணைப்பதற்காக முப்படை தலைமை தளபதி பதவி மத்திய அரசால் உருவாக்கப்பட்டது.
ஒப்புதல்
முதல் முப்படை தலைமை தளபதியாக 2021ல் நியமிக்கப்பட்ட ஜெனரல் பிபின் ராவத், 2022ல் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அடுத்ததாக, 2022, செப்., முதல் இரண்டாவது முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமிக்கப்பட்டார்.
இவரின் பதவிக்காலம், கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த நிலையில், வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், நாட்டின் மூன்றாவது முப்படை தலைமை தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த என்.எஸ்.ராஜா சுப்ரமணியை நியமிக்க அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அனில் சவுகானின் ஓய்வுக்கு பின், இம்மாத இறுதியில் ராஜா சுப்ரமணி பொறுப்பேற்பார் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள தேசிய ராணுவ கல்லுாரியின் முன்னாள் மாணவரான ராஜா சுப்ரமணி, சென்னை பல்கலையில் ராணுவ ஆய்வில் எம்.பில்., பட்டம் பெற்றுள்ளார்.
டில்லி மற்றும் ஐரோப்பிய நாடான பிரிட்டரின் லண்டனில் பயின்ற இவர், தேசிய பாதுகாப்பு கல்விக் கழகம் மற்றும் இந்திய ராணுவ கல்வி கழகத்தில் இளநிலை பட்டம் பெற்றுள்ளார். ராணுவத்தில், 37 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி பல்வேறு முக்கிய பதவிகளை ராஜா சுப்ரமணி வகித்துள்ளார்.
கடந்தாண்டு செப்., முதல் தேசிய ராணுவ கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகவும் இவர் பணியாற்றி வருகிறார். முன்னதாக, 2024, ஜூலை 1, முதல் கடந்தாண்டு ஜூலை 31 வரை ராணுவ துணைத் தலைமை தளபதியாகவும் ராஜா சுப்ரமணி பணியாற்றியுள்ளார்.
மின்னணு போர்
கஜகஸ்தான் நாட்டின் அஸ்தானாவில் உள்ள இந்திய துாதரகத்தின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய இவர், பாக்., உடனான சர்வதேச எல்லையில் காலட்படையை வழி நடத்தியுள்ளார்.
கடற்படையின் தலைமை தளபதியாக உள்ள தினேஷ் குமார் திரிபாதியின் பதவிக்காலம் வரும் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமி நாதனை மத்திய அரசு நியமித்துள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பையில் மேற்கு கடற்படை பிரிவு தளபதியாக உள்ள துணை அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதனின் பதவிக்காலம் 2028, டிச., 31 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1987ல், ஜூலை 1ல் கடற்படை அதிகாரியாக பொறுப்பேற்ற கிருஷ்ணா சுவாமிநாதன், தகவல் தொடர்பு மற்றும் மின்னணு போர் முறையில் நிபுணத்துவம் பெற்றவர்.
இவர், கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய ராணுவ அகாடமி, பிரிட்டனின் ஸ்ரீவென்ஹாமில் உள்ள கூட்டுப்படைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லுாரியில் பயின்றுள்ளார்.
