டிஜிட்டல் விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி; சி.பி.எஸ்.இ., தலைவர், செயலர் துாக்கியடிப்பு
டிஜிட்டல் விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி; சி.பி.எஸ்.இ., தலைவர், செயலர் துாக்கியடிப்பு
UPDATED : ஜூன் 03, 2026 08:22 PM
ADDED : ஜூன் 03, 2026 08:27 PM

புதுடில்லி:
சி.பி.எஸ்.இ., ப்ளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களை, ஓ.எஸ்.எம்., எனப்படும் கணினி திரையில் திருத்தும் பணி மற்றும் மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களை மாணவர்களுக்கு பதிவேற்றுதல் போன்றவற்றில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, சி.பி.எஸ்.இ., தலைவர் ராகுல் சிங் மற்றும் செயலர் ஹிமன்ஷு குப்தா ஆகியோர் அப்பதவியில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர்.
சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இந்தாண்டு நடத்திய பிளஸ் 2 பொதுத்தேர்வை, நாடு முழுதும், 18.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர்.
விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்வதற்காக, ஓ.எஸ்.எம்., எனப்படும் முழுமையான கணினி திரைவழி மதிப்பீட்டு முறையை சி.பி.எஸ்.இ., அறிமுகப்படுத்தியது.
தேர்வு முடிவுகள் வெளியான போது, லட்சக்கணக்கான மாணவர்கள் தாங்கள் கணித்த மதிப்பெண்கள் வரவில்லை என, புகார் கூறினர். இதற்காக மறுமதிப்பீட்டுக்கு என, 'ஆன் மார்க்' என்ற தனியார் நிறுவனம் நியமிக்கப்பட்டிருந்தது.
அவர்கள் பதிவேற்றிய விடைத்தாள்கள் முழுமையாக இல்லாமல் இருந்தன. இதனால் மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே, 'ஆன் மார்க்' நிறுவன இணையத்தின் பாதுகாப்பு குளறுபடியால், மாணவர்களின் விடைத்தாள்களை யார் வேண்டுமானாலும் அணுக கூடிய ஆபத்து நிலவியது.
சி.பி.எஸ்.இ., நிர்வாகமும் இதை ஒப்புக்கொண்டது. ஐ.ஐ.டி., நிபுணர் குழுவினரின் மேற்பார்வையில் சைபர் பாதுகாப்பு பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு வருவதாக விளக்கம் அளித்திருந்தது.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ., தலைவர் ராகுல் சிங் மற்றும் செயலர் ஹிமான்ஷு குப்தா ஆகியோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ராகுல் சிங் மாற்றத்தை தொடர்ந்து, சி.பி.எஸ்.இ.,யின் புதிய தலைவராக, உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் லோக்ஹண்டே பிரசாந்த் சீதாராம் நியமிக்கப்பட்டு உள்ளார்.
சைபர் தாக்குதல்கள் முறியடிப்பு
சி.பி.எஸ்.இ., மறுமதிப்பீடுக்கான புதிய இணையதளம் நேற்று முதல் செயல்பட துவங்கியது. பயன்பாட்டுக்கு வந்த சில மணி நேரத்திலேயே, 16,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களை வெற்றிகரமாக சமர்ப்பித்தனர். இதற்கிடையே, தொடர்ச்சியான சைபர் தாக்குதல்கள் மூலம் சி.பி.எஸ்.இ., தளத்தின் சேவைகளை முடக்க முயன்றதாக, அதன் சைபர் பாதுகாப்பு குழு தெரிவித்தது.
இரண்டு நிமிடங்களில், 15 லட்சம் பேர் தளத்தை பார்வையிடுவது போல் செயற்கை நெரிசல் ஏற்படுத்தப்பட்டது. ஒரு லட்சம் பேர், மாணவர்களின் கோப்புகளை அனுமதியின்றி அணுக முயன்றனர். இவை அனைத்தும் முறியடிக்கப்பட்டதாக சி.பி.எஸ்.இ.,யின் சைபர் பாதுகாப்பு குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
