ஹாஸ்டலில் அழுகிய காய்கறிகளில் உணவு எம்.எல்.ஏ.,விடம் புகார் அளித்த மாணவர்கள்
ஹாஸ்டலில் அழுகிய காய்கறிகளில் உணவு எம்.எல்.ஏ.,விடம் புகார் அளித்த மாணவர்கள்
UPDATED : ஜூன் 05, 2026 07:51 PM
ADDED : ஜூன் 05, 2026 07:53 PM
பெங்களூரு:
கர்நாடக அரசு ஆண்டு தோறும், கல்வித்துறைக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறது. மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யவும், உணவுக்காகவும் தாராளமாக நிதி வழங்குகிறது.
ஆனால் இந்த நிதி, மாணவர்களின் நலனுக்கு பயன்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மழை பெய்தால் ஒழுகும், மோசமான கட்டடம், பெயின்டை கண்டு பல ஆண்டுகளான சுவர்கள். பாதுகாப்பற்ற சூழ்நிலை என, பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே, மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
பள்ளி, கல்லுாரிகளின் விடுதிகளும், இதற்கு விதி விலக்கு அல்ல. எஸ்.சி., பிரிவின் மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளில், அவர்களுக்கு தரமான உணவு கிடைப்பது இல்லை. அழுகிய காய்கறிகள் பயன்படுத்தி, உணவு தயாரித்து மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விஷயத்தை மாணவர்களே, வெளிச்சத்துக்கு கொண்டு வந்தனர்.
பீதர் மாவட்டம், பசவ கல்யாணா நகரில், சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள விடுதியில், மாணவர்களுக்கு தயாரிக்கும் உணவில், அழுகிய காய்கறிகள் பயன்படுத்துகின்றனர்.
இது குறித்து, அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் பயன் இல்லை. நேற்று காலையும் மாணவர்களின் உணவில் அழுகிய காய்கறிகள் இருந்தன.
கோபமடைந்த மாணவர்கள், தரமற்ற உணவு, அழுகிய காய்கறிகளுடன் பசவ கல்யாணா தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ., சரணு சலகரின் இல்லத்துக்கு வந்து, அவற்றை காட்டி புகார் அளித்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த எம்.எல்.ஏ., சரணு சலகர், உடனடியாக ஹாஸ்டல் வார்டன் மற்றும் அதிகாரிகளுக்கு போன் செய்து கண்டித்தார்.
'உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு, இத்தகைய மோசமான உணவை கொடுப்பீர்களா. சிறார்களுக்கு த ரமான உணவை தாருங்கள். மாணவர் விடுதிகளில் உணவு வழங்க, மாநில அரசு, போதுமான நிதி வழங்குகிறது. ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்' என கேள்வி எழுப்பினார்.
மேலும், இனியும் இப்படி நடந்து கொண்டால், ஒழுங்கு நடவடிக்கையாக எடுப்பதாக எச்சரித்தார்.
அது மட்டுமின்றி, தன் வீட்டிலேயே அனைத்து மாணவர்களுக்கும் உணவளித்து உபசரித்தார். இனி, ஹாஸ்டலில் தரமான உணவு வழங்கப்படும் என, உறுதி அளித்தார்.
