தொல்லியல் துறை அலுவலர் தேர்வில் தமிழ் படித்த மாணவர்கள் புறக்கணிப்பா?
தொல்லியல் துறை அலுவலர் தேர்வில் தமிழ் படித்த மாணவர்கள் புறக்கணிப்பா?
UPDATED : ஜூன் 10, 2026 01:29 PM
ADDED : ஜூன் 10, 2026 01:31 PM
மதுரை:
டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தொல்லியல் துறை அலுவலர், துணை அலுவலர் பதவிகளுக்கான தேர்வில் முதுகலையுடன் கூடுதலாக கல்வெட்டியல், தொல்லியல் டிப்ளமோ படிப்புகள் படித்திருப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற கடைசி நேர அறிவிப்புகளால் தங்களின் அரசுப்பணி கனவு கேள்விக் குறியாகியுள்ளது. பழைய கல்வித்தகுதி முறைகளையே பின்பற்ற வேண்டும் என தமிழ் படித்த மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2020ம் ஆண்டு நடத்தப்பட்ட தொல்லியல் அலுவலர் பணிக்கான தேர்வில், தமிழ், வரலாறு அல்லது தொல்லியல் பாடங்களில் ஏதேனும் ஒரு முதுகலைப் பட்டம் பெற்றிருந்தால் விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டது. இளங்கலைப் படிப்பில் தமிழை ஒரு பாடமாக கட்டாயம் பயின்றிருக்க வேண்டும் என்பது மட்டுமே கூடுதல் கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நேர்முகத்தேர்வு அல்லாத டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வில் இடம்பெற்றுள்ள தொல்லியல் துறை அலுவலர் மற்றும் தொல்லியல் துறை துணை அலுவலர் பணியிடங்களுக்கான கல்வித் தகுதியில், தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், சென்னையில் செயல்படும் தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனத்தில் தொல்லியல் அல்லது கல்வெட்டியல் தொடர்பான டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் கூறுகையில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு முன்பிருந்த கல்வித் தகுதி முறைகளையே தொடர வேண்டும்.
கூடுதல் டிப்ளமோ தகுதியை கட்டாயமாக்குவது, ஏற்கனவே முதுகலை தமிழ் பயின்ற மாணவர்களை தகுதி இழக்க சேர்க்கப்பட்டது போல் உள்ளது.
தமிழ் படித்தவர்கள் தொல்லியல் துறையில் பணியாற்றும் போது, தற்போது மட்டும் கூடுதல் டிப்ளமோ ஏன் அவசியம் என்பது விளங்கவில்லை. டி.என்.பி.எஸ்.சி., காலண்டர் வெளியிட்டபோதே கூடுதல் டிப்ளமோ படிப்புகள் அவசியம் என குறிப்பிடாமல், தேர்வுக்கு சில மாதங்களுக்கு முன் அறிவித்துள்ளது ஏற்கத்தக்கதல்ல' என்றனர்.
கீழடி, ஆதிச்சநல்லுார், கொற்கை உள்ளிட்ட முக்கிய தொல்லியல் ஆய்வுத் தளங்கள் தென் மாவட்டங்களில் அமைந்துள்ள நிலையில், தொல்லியல் கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகள் சென்னையை மையமாகக் கொண்டே இருப்பது ஏமாற்றமளிப்பதாகவும் மாணவர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
தொல்லியல் துறை அலுவலர், துணை அலுவலர் பணிகளுக்கான கல்வித் தகுதியில் மாற்றம் செய்து, பழைய தகுதி முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
