இரவு, பகலாக பாடப் புத்தகங்கள் சிவகாசியில் மும்முரமாக தயாரிப்பு
இரவு, பகலாக பாடப் புத்தகங்கள் சிவகாசியில் மும்முரமாக தயாரிப்பு
UPDATED : ஜூன் 22, 2011 12:00 AM
ADDED : ஜூன் 22, 2011 10:59 AM
சிவகாசியில் தயாராகும் பாடப் புத்தகங்கள் விவரங்களை, தினமும் அரசுக்கு அறிக்கை வழங்க, வருவாய் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பழைய பாடத்திட்டப்படி புத்தங்கள் அச்சிடும் பணி, சிவகாசி, சென்னை அச்சகங்களில் நடக்கிறது. சிவகாசியில் 21 அச்சகங்களில், பத்தாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பிற்கான புத்தங்கள் அச்சிடும் பணி இரவு, பகலாக நடக்கிறது. இதற்காக, சிவகாசியில் மின் தடை ஏற்படாத வகையில், சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
சிவகாசியில் அச்சிடப்படும் பாடப் புத்தக விவரங்களை, அரசுக்கு தினம் அறிக்கையாக வழங்க, வருவாய் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, எத்தனை ஆயிரம் புத்தங்கள் அச்சிடப்பட்டுள்ளன என்ற விவரத்தை அனுப்பக் கூறியுள்ளனர். அதன்படி வருவாய் அலுவலர்கள், ஒவ்வொரு அச்சகத்திலும் விவரம் சேகரிக்கின்றனர்.
தமிழ்நாடு பாடநூல் கழக அதிகாரிகள், அச்சிடும் பணியை கண்காணித்த நிலையில், கோர்ட் உத்தரவிற்கு ஏற்ப, பாடப் புத்தகங்களை பள்ளிகளுக்கு விரைவாக வழங்க வேண்டும் என்பதற்காக, வருவாய் துறை அலுவலர்களையும், இப்பணியில் அரசு ஈடுபடுத்தி உள்ளது. சமச்சீர் பாடப் புத்தங்கள் தரமானதாக இல்லை என்பதால், பழைய பாட திட்டப்படி வகுப்புகளை நடத்த அரசு முடிவு செய்தது.
இதன் பிரச்னை கோர்ட்டுக்கு சென்றதால், கோர்ட் வழிகாட்டுதலில், கல்வியாளர் குழு தரும் அறிக்கையின்படி, மூன்று வாரத்திற்கு பின் தீர்ப்பு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.