சாலை வசதியில்லாததால், படிப்பை பாதியில் நிறுத்திய ஆதிவாசி மாணவர்கள்
சாலை வசதியில்லாததால், படிப்பை பாதியில் நிறுத்திய ஆதிவாசி மாணவர்கள்
UPDATED : நவ 09, 2014 12:00 AM
ADDED : நவ 09, 2014 11:22 AM
கூடலூர்: கூடலூர் காபிகாடு ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த மாணவர்கள், சாலை சரியில்லாத காரணத்தை முன்வைத்து, பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியாம் பாறையிலிருந்து இரண்டு கி.மீ., தொலைவில் அமைந்துள்ள காபிகாடு ஆதிவாசி கிராமத்தில், காட்டுநாயக்கர் இனத்தை சேர்ந்த 20 ஆதிவாசி குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் பயன்படுத்தும் புளியாம்பாறை - காபிகாடு சாலையில், ஒரு கி.மீ., சாலை சீரமைக்காமல், மோசமான மண் சாலையாக உள்ளன. இதன் வழியாக நடந்துதான், மாணவர்கள் புளியாம்பாறை அரசு பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
கடந்த சில வாரங்களாக பெய்த மழையின் காரணமாக, இந்த கிராமத்துக்கு செல்லும் மண்சாலை, சேரும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால், நாள்தோறும், குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்கு செல்லமுடியாத காரணத்தால், 14 மாணவர்கள் திடீரென பள்ளி செல்வதை நிறுத்தி விட்டனர். சிலர் தோட்டவேலையில் ஈடுபட துவங்கியுள்ளனர்.
மாணவர்கள் கூறுகையில், "சேறும் சகதியுமான சாலையில் நடந்து பள்ளிக்கு செல்ல முடிவதில்லை; அதனால், பள்ளியில் இருந்து நின்று விட்டோம்" என்றனர்.
சாலை பிரச்னையை முன்வைத்து, பள்ளிக்கு செல்ல மாணவர்கள் பின்வாங்குவதாகவும் தெரிகிறது. மாணவர்கள் பள்ளி செல்லாமல் உள்ள உண்மையான காரணத்தை கண்டறிந்து, அவர்களுக்கு மீண்டும் கல்வி கிடைக்க உரிய நடவடிக்கையை, கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

