கனியாமூர் பள்ளி கலவர வழக்கு: மாணவியின் தாயிடம் விசாரணை
கனியாமூர் பள்ளி கலவர வழக்கு: மாணவியின் தாயிடம் விசாரணை
UPDATED : ஜூலை 02, 2024 12:00 AM
ADDED : ஜூலை 02, 2024 10:00 AM
வேப்பூர்:
கனியாமூர் பள்ளி கலவர வழக்கு தொடர்பாக, இறந்த மாணவி ஸ்ரீமதியின் தாயிடம், சிறப்பு புலனாய்வு குழு டி.ஸ்.பி., விசாரணை நடத்தினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்த மாணவி ஸ்ரீமதி, கடந்த 2022, ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இதை கண்டித்து அதே ஆண்டு ஜூலை 17ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டம், கலவரமாக மாறி, அப்பள்ளி சூறையாடப்பட்டது.
மாணவியின் இறப்பு வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. பள்ளியில் நடந்த கலவரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. பின், 519 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு, 166 பேரின் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இவ்வழக்கை வேறு புலனாய்வு குழுவுக்கு மாற்றக் கோரி பள்ளி தாளாளர் ரவிக்குமார் தொடர்ந்த மனு மீதான விசாரணை, சென்னை ஐகோர்ட்டில் கடந்த 27ம் தேதி நடந்தது. அதில், வி.சி., கடலுார் மாவட்ட செயலாளர் திராவிடமணி, இறந்த மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி ஆகியோரை விசாரிக்க வேண்டி பள்ளி நிர்வாகம் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.
மனுவை பரிசீலித்த நீதிபதி, வி.சி.,மாவட்ட செயலாளர் திராவிடமணி மற்றும் மாணவியின் தாய் செல்வி இருவரிடம் விசாரிக்க உத்தர விட்டார்.
அதன்பேரில், இருவரையும் விசாரணைக்கு ஆஜராக, சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பியது. அதன்படி நேற்று முன்தினம், வி.சி., மாவட்ட செயலாளர் திராவிடமணி, கள்ளக்குறிச்சியில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகளிடம் ஆஜராகினார்.
அதனை தொடர்ந்து, டி.எஸ்.பி., அம்மாதுரை தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று பகல் 11:45 மணிக்கு கடலுார் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலுாரில் உள்ள மாணவி ஸ்ரீமதி வீட்டிற்கு சென்று, அவரது தாய் செல்வியிடம் மதியம் 2:00 மணிவரை விசாரணை நடத்திவிட்டு சென்றனர்.
விசாரணை குறித்து மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி கூறுகையில், ஸ்ரீமதியின் மரணத்தை மறைக்க போலீசாரின் உதவியுடன் பள்ளி நிர்வாகம் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தியது. கலவரத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்பதை சிறப்பு புலனாய்வு குழுவிடம் தெரிவித்தேன் என்றார்.