நுாலகத்தை காலி செய்ய உத்தரவு; அமைச்சரிடம் பொதுமக்கள் புகார்
நுாலகத்தை காலி செய்ய உத்தரவு; அமைச்சரிடம் பொதுமக்கள் புகார்
UPDATED : செப் 14, 2024 12:00 AM
ADDED : செப் 14, 2024 11:21 AM
ப.வேலுார்:
ப.வேலுார், பள்ளி சாலையில் 60 ஆண்டுகள் பழமையான பொது நுாலகம் உள்ளது. 11 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 60 ஆயிரம் புத்தகங்கள் உள்ளது. தினமும், 150 பேர் நுாலகத்துக்கு வருகின்றனர். ப.வேலுார் டவுன் பஞ்சாயத்துக்கு சொந்தமான இடத்தில் நுாலகம் உள்ளது.
நுாலக கட்டடம் பழுதடைந்ததால், அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டி, விஸ்தரிப்பு செய்ய வாசகர்கள் முடிவு செய்தனர். சில மாதங்களுக்கு முன்பு நடந்த மன்ற கூட்டத்தில், கட்டடம் விஸ்தரிக்க, டவுன் பஞ்சாயத்துக்கு சொந்தமான, 10 சென்ட் இடத்தை கொடுக்க தீர்மானத்தை கவுன்சிலர்கள் நிறைவேற்றினர்.
இந்நிலையில், தற்போது ப.வேலுாருக்கு புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட செயல் அலுவலர் சோமசுந்தரம், நுாலக அதிகாரிகளை தொடர்பு கொண்டு, டவுன் பஞ்.,க்கு சொந்தமான இடத்தை காலி செய்யுங்கள் என உத்தரவிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வாசகர்கள், கல்லுாரி மாணவர்கள், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷிடம் புகார் மனு அளித்தனர். இதையடுத்து நாமக்கல் கலெக்டர் உமாவிடம், இது குறித்து விசாரிக்க அமைச்சர் உத்தரவிட்டார். இதனால் கலெக்டர் உமா, நேற்று காலை ப.வேலுார் நுாலகம், காலியிடம் குறித்து விசாரணை மேற்கொண்டார்.
இதுகுறித்து ப.வேலுார் வாசகர் வட்டார தலைவர் இளங்கோ கூறுகையில், கலெக்டர் உமா விசாரணை நடத்தி, வாசகர்களுக்கு கழிப்பிட வசதி, புதிய கட்டடம் கட்ட உரிய வழிவகை செய்யப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளார், என்றார்.