மாணவனுக்கு தீக்காயம்; நடவடிக்கை கோரி பள்ளி முற்றுகை
மாணவனுக்கு தீக்காயம்; நடவடிக்கை கோரி பள்ளி முற்றுகை
UPDATED : அக் 17, 2024 12:00 AM
ADDED : அக் 17, 2024 09:54 AM
சூலுார்:
மாணவனுக்கு தீக்காயம் ஏற்பட காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுல்தான்பேட்டை ஒன்றியம் பொன்னாக்கானியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த, 9 ம்தேதி பள்ளியில் சுத்தம் செய்யும் பணி நடந்தது. அப்போது, சேகரமான குப்பைக்கு தீ வைக்க, மாணவர்களிடம் ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
குப்பையை எரிக்கும் போது, அதில் இருந்த மர்ம பொருள் வெடித்து, 10 ம் வகுப்பு மாணவன் சுபாஷ் காயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மாணவர் வீடு திரும்பினார். மருத்துவ செலவை ஏற்பதாக ஆசிரியர்கள், மாணவனின் பெற்றோரிடம் கூறியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பெற்றோர், மாணவர்கள் நேற்று பள்ளி முன் திரண்டு, திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களிடம் வேலை வாங்க கூடாது, தலைமை ஆசிரியை ராஜாமணி மீது நடவடிக்கை எடுத்து இடமாற்றம் செய்ய வேண்டும், என, கோரிக்கை விடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற சுல்தான்பேட்டை போலீசார் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மகேஷ்வரி பள்ளிக்கு சென்று பெற்றோரிடம் சமாதானம் பேசினர். உங்கள் கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என, உறுதி அளித்தனர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. மாணவ, மாணவியர் பள்ளிக்கு சென்றனர்.