மிர்ஜன் கோட்டையை பார்த்து மிரண்ட கல்லுாரி மாணவியர்
மிர்ஜன் கோட்டையை பார்த்து மிரண்ட கல்லுாரி மாணவியர்
UPDATED : பிப் 17, 2025 12:00 AM
ADDED : பிப் 17, 2025 08:28 AM
திருப்பூர்:
பல்லடம் ரோடு, எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரி வரலாற்றுத்துறை இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவியர், 80 பேர், முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவியர், 28 பேர், கர்நாடக மாநிலத்துக்கு கல்வி சுற்றுலா சென்றனர்.
கடந்த வாரத்தில், ஐந்து நாட்கள், கர்நாடக மாநிலத்தில் உள்ள மிர்ஜன் கோட்டை, மகுடேஸ்வர கோவில், உடுப்பி கிருஷ்ணா கோவில் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு, வரலாற்றுத்துறை சார்ந்த, சிற்பகலை மற்றும் கட்டட கலை விபரங்களை குறிப்பெடுத்தனர். ஆய்வு கட்டுரை தகவல்களை கோவை பாரதியார் பல்கலைக்கு சமர்பிக்க உள்ளனர்.
சுற்றுலா சென்ற கல்லுாரி மாணவியர் கூறுகையில், கட்டடக்கலை நேர்த்தியுடன் காணப்பட்ட மிர்ஜன்கோட்டை, கடந்த கால போர்களின் இருப்பிடமாக வியக்கதக்க தகவல்களுடன் காணப்பட்டது. 16ம் நுாற்றாண்டின் விஜய நகர பேரரசின் பெருமை சொல்லும் விதமாக இருந்தது. மிர்ஜன் துறைமுகத்தில் இருந்து சூரத்துக்கு மிளகு, வெற்றிலை அப்போதே அனுப்பியதற்கான சான்றுகளும் உள்ளது. 1200 ஆம் ஆண்டு முதல் கோட்டையை தொல்பொருள் ஆய்வு நிறுவனம் பழமை மாறாமல் வைத்துள்ளது.
உடுப்பி கிருஷ்ணர் கோவில், மூலவர் கிருஷ்ணர், மத்வ புஷ்கரிணி தீர்த்தம் ஆன்மிகத்தை எடுத்துக்காட்டும் வகையில் இருந்தது, என்றனர்.
மாணவியருடன் வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் ராமலிங்கம், ஜெயசித்ரா, மகேஸ்வரி, வாசுகி, புனிதா, கிருஷ்ணபிரியா, காளீஸ்வரி, கருப்பையா, கற்பகம் மற்றும் லதா உள்ளிட்ட பேராசிரியர்கள் பயணித்தனர்.