தமிழகத்தின் உயர் கல்வி வளர்ச்சிக்கு எம்.ஜி.ஆரே காரணம்: பாரிவேந்தர்
தமிழகத்தின் உயர் கல்வி வளர்ச்சிக்கு எம்.ஜி.ஆரே காரணம்: பாரிவேந்தர்
UPDATED : ஆக 25, 2025 12:00 AM
ADDED : ஆக 25, 2025 08:25 AM
சென்னை:
''தமிழகத்தின் உயர் கல்வி வளர்ச்சிக்கு எம்.ஜி.ஆரும், அ.தி.மு.க.,வுமே காரணம்,'' என, இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்தார்.
சென்னை காட்டாங்குளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலை வளாகத்தில் நடந்த, தன் 86வது பிறந்த நாள் விழாவில், அவர் பேசியதாவது:
அடிப்படையில் நான் கல்வியாளர், ஆசிரியர். பள்ளியில் துவங்கிய என் கல்வி பயணம், இன்று நான்கு பல்கலைகள், 35 கல்லுாரிகள் என வளர்ந்துள்ளது. இந்த கல்வி நிறுவனங்களில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.
குடும்ப ஆட்சியை அகற்றுவது, ஊழல் ஒழிப்பு, பெண்களுக்கு சம உரிமை, விவசாய குடும்பத்தில் பிறந்த ஒருவர் தமிழகத்தை ஆள வேண்டும் உள்ளிட்ட லட்சியங்களை அடைவதற்காகவே, இந்திய ஜனநாயக கட்சியை துவங்கினோம்.
தமிழக முதல்வராக இருந்த பழனிசாமி, விவசாய குடும்பத்தில் பிறந்தவர். அவர் என் பிறந்த நாள் விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி.
எங்களது கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், 2026 சட்டசபை தேர்தலில், மீண்டும் ஒரு தமிழர், ஒரு விவசாயி பழனிசாமி தமிழகத்தை ஆள வேண்டும் என்பதே என் விருப்பம்.
எஸ்.ஆர்.எம்., பல்கலையின் இந்த அரங்கில் நடந்த விழாவுக்கு, பிரதீபா பாட்டீலை அழைத்து பேச வைத்தோம். அடுத்த ஆறு மாதங்களில், அவர் ஜனாதிபதியானார். அதுபோல, இங்கே வந்த பிறகு சில மாதங்களில், மோடி பிரதமரானார்.
இப்போது, துணை ஜனாதிபதியாக போகும் சி.பி.ராதாகிருஷ்ணனை சில மாதங்களுக்கு முன், இங்கு நடந்த நிகழ்ச்சிக்கு அழைத்தோம். அப்போதே அவரிடம், இந்த மேடையின் மகத்துவத்தை சொல்லி, உங்களுக்கு மேலும் உயர்வு கிடைக்கும் என்றேன்; அதுபோல நடந்தும் விட்டது.
இப்போது பழனிசாமியை அழைத்திருக்கிறோம். அடுத்த எட்டு மாதங்களில், அவரும் முதல்வராவார்.
ஊழல் நடக்கிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆள்கிறார்கள். அவர்கள் படித்தவர்களோ, திறமைசாலிகளோ இல்லை. ஆனால், ஏதோ நடக்கிறது. அது பற்றி மக்களுக்கு கவலை இல்லை. 'மக்களை தொடர்ந்து முட்டாள்களாக வைத்திருப்பேன்.
மக்கள் சொந்தமாக சம்பாதித்து வாழும் அளவுக்கு திட்டங்கள் போட மாட்டேன். ஓட்டு போட, மக்கள் வரி பணத்தை கொடுத்து, மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடுவேன்' என்பது தான் அவர்கள் கற்ற தத்துவம். அவர்களின் தோழமை கட்சிகளுக்கு சுயமரியாதை, தன்மானம் இல்லை. தவறு நடக்கிறது என்று தெரிந்தும் ஒட்டிக் கொண்டிருக்கின்றன.
எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது, மருத்துவம், பொறியியல் கல்லுாரிகள் அதிக அளவில் வேண்டும் என்று சிந்தித்தார். தமிழகத்தில், 450க்கும் அதிகமான பொறியியல் கல்லுாரிகள், 40க்கும் அதிகமான மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இதில் படித்த பல லட்சக்கணக்கான மாணவர்கள் உலகெங்கும் பணியாற்றி வருகின்றனர்.
இதற்கெல்லாம் பரந்த மனம் கொண்ட எம்.ஜி.ஆரும், அன்றைய கல்வி அமைச்சர் அரங்கநாயகமுமே காரணம். தமிழகத்தின் உயர் கல்வி வளர்ச்சிக்கு எம்.ஜி.ஆரும், அ.தி.மு.க.,வும் தான் காரணம். என்ன தான் மடைமாற்றினாலும் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ''பழனிசாமியை மீண்டும் முதல்வராக்கும் வல்லமை உடைய சக்தியாக பா.ஜ., உள்ளது. நமது கூட்டணியின் தேர்தல் பணியின் துவக்கமாக, இந்த பிறந்த நாள் விழா அமைந்துள்ளது ,'' என்றார்.