இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை தேவை
இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை தேவை
UPDATED : செப் 06, 2025 12:00 AM
ADDED : செப் 06, 2025 10:39 AM

புதுச்சேரி:
பேராசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புதுச்சேரி இன்ஜினியரிங் கல்லுாரி ஆசிரியர்கள் அசோசியேஷன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அசோசியேஷன் துணைத் தலைவர் ஸ்ரீதர், செயலா ளர் ஜெயபாரதி ஆகியோரது அறிக்கை:
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (பி.டி.யு) பணிபுரியும் பேராசிரியர்களின் துயரத்தைக் கவனிக்க யாரும் முன்வரவில்லை. கடந்த 40 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான மாணவர்களை பொறியாளர்களாக உருவாக்கிய நிறுவனத்தின் ஆசான்கள், சுமையோடு வாழ்கிறார்கள்.
கடந்த 2016ம் ஆண்டுக்கு பிறகு பதவி உயர்வுகள் வழங்காததால் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல போராட்டத்துக்குப் பின், அரசு அனுமதியுடன் 2023ல், நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு, தகுதியான பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.
ஆனால், பல்கலைக்கழகத்துக்கும், ஆசிரியர்களுக்கும் எதிராக சிலர் திட்டமிட்டு பொய் புகார்கள் கொடுத்ததன் விளைவாக, பதவி உயர்வு பெற்றும், உரிய ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. எனவே, பேராசிரியர்களின் கோரிக்கைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.