UPDATED : ஜூலை 01, 2011 12:00 AM
ADDED : ஜூலை 01, 2011 12:25 PM
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் கீழ், தற்போது 10 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், இந்த ஆண்டு புதிதாக துவங்கப்பட்டுள்ள அன்னபூரணி மருத்துவக் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை தவிர, ஏழு தனியார் மருத்துவக் கல்லூரிகள், தங்கள் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்த கோரியிருந்தன.
இதை, சம்பந்தப்பட்ட கல்லூரிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துருக்கள் உள்ளிட்ட விவரங்களின் அடிப்படையில், நீதிபதி பாலசுப்ரமணியன் தலைமையிலான கல்விக் கட்டண நிர்ணயக் குழு விரிவாக ஆராய்ந்தது.
இக்குழுவின் தலைவர் நீதிபதி பாலசுப்ரமணியன், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான, 2011-12ம் கல்வியாண்டிற்கான கல்விக் கட்டணம் குறித்து, நேற்று மாலை நிருபர்களிடம் கூறியதாவது: கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஸ்ரீமூகாம்பிகை மருத்துவ அறிவியல் நிறுவனம், தாகூர் மருத்துவக் கல்லூரி மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி(திருச்சி) ஆகிய தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான ஆண்டு கல்விக் கட்டணம், 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஸ்ரீமுத்துகுமரன் மருத்துவக் கல்லூரி, அன்னபூரணி மருத்துவக் கல்லூரி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கல்விக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.ஜி., மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் கல்விக் கட்டணமாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயில் மாற்றம் இல்லை. பெருந்துறை ஐ.ஆர்.டி.டி., மருத்துவக் கல்லூரி கட்டண உயர்வு கோரவில்லை. இந்த கல்விக் கட்டணம், நடப்பு கல்வியாண்டிற்கு மட்டுமே பொருந்தும். இவ்வாறு நீதிபதி பாலசுப்ரமணியன் கூறினார்.
முன்னதாக, மருத்துவக் கல்வி இயக்குனர் வம்சதாரா, சுகாதாரத் துறை செயலர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட கல்விக் கட்டண ஐவர் குழு, தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியது.
