மாற்றுத் திறனாளிகளின் சிரமத்தை குறைக்க புதிய நடைமுறை
மாற்றுத் திறனாளிகளின் சிரமத்தை குறைக்க புதிய நடைமுறை
UPDATED : டிச 25, 2012 12:00 AM
ADDED : டிச 25, 2012 08:29 AM
பொள்ளாச்சி: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும், மாற்றுத் திறனாளி தேர்வாளர்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், புதிய நடைமுறையை, தேர்வுத் துறை கொண்டு வந்துள்ளது.
பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளிகளின் செயல் தன்மையை பொறுத்து, தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்குதல், தேர்வர்கள் சொல்வதை எழுதுபவர் நியமனம் உள்ளிட்டவை குறித்து பரிந்துரை செய்து, கல்வித் துறை வாயிலாக, தேர்வுத் துறைக்கு, கருத்துரு அனுப்பப்படும். இதை உறுதி செய்த பின், மாணவர்களுக்கு தேர்வு எழுவதில் சலுகை வழங்கப்படும். நடப்பாண்டில், இம்முறையை எளிமையாக்கி, தேர்வுத் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு தேர்வுத் துறை அனுப்பியுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர் சொல்வதை, எழுதுபவர் நியமனம் குறித்த கருத்துருக்கள், தேர்வுத் துறை அலுவலகத்துக்கு, தாமதமாகக் கிடைக்கிறது. எனவே, மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் இருந்து, இம்மாணவர்கள் குறித்த குறிப்பிட்ட சான்றிதழ்களை பெற்று, உடனடியாக அனுப்ப வேண்டும்.
பார்வையற்றோர் என்பதை நிரூபிக்கும் வகையில், அரசு கண் மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவ சான்றிதழ்; உடல் ஊனமுற்றவராயின், தேர்வு எழுத இயலாத அளவுக்கு உடல் ஊனமுற்றவர் என, வழங்கப்பட்ட சான்றிதழ்; தேர்வரின் முழு அளவிலான போட்டோ, சொல்வதை எழுதுபவர் நியமனம் அல்லது கூடுதல் நேரம் வழங்க வேண்டிய மாணவர்கள் விவரம் ஆகியவை குறித்து, தக்க ஆதாரங்களுடன் கருத்துருக்கள் வழங்க வேண்டும்.
காது கேளாதோர், வாய் பேசாதோருக்கு, முதன்மை மொழி அல்லது ஆங்கில மொழியிலிருந்து, தேர்வு விலக்கு அளிக்கப்படுகிறது. இதற்கான கருத்துருவும் அனுப்ப வேண்டும். "டிஸ்லெக்சியா&' குறைபாடுள்ள மாணவர்களுக்கு, தேவைப்படும் சலுகைகள் வழங்கக் கோரும் விண்ணப்பங்களை, அரசு மருத்துவர்கள் அல்லது மனோதத்துவ நிபுணர்கள் அடங்கிய அரசு மருத்துவக் குழு வழங்கும் சான்றிதழ், பாட ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களின் பரிந்துரை சான்றிதழ் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனமான, மெட்ராஸ் டிஸ்லெக்சியா அசோசியேஷன் வழங்கும் சான்றிதழ்களுடன், விண்ணப்பிக்க வேண்டும்.
செய்முறை தேர்வுக்கு விலக்கு கோரும் மாற்றுத் திறனாளி தேர்வர்களின் விவரம், பள்ளிகளில் இருந்து, கல்வி மாவட்ட வாரியாக தொகுத்து வழங்க வேண்டும். இவை, வரும், ஜன., 9ம் தேதிக்குள், அந்தந்த தேர்வுத் துறை மண்டல துணை இயக்குனரகத்துக்கு, அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
