மருத்துவ மாணவர் சேர்க்கை: முதற்கட்ட கலந்தாய்வு நிறைவு
மருத்துவ மாணவர் சேர்க்கை: முதற்கட்ட கலந்தாய்வு நிறைவு
UPDATED : ஜூன் 23, 2014 12:00 AM
ADDED : ஜூன் 23, 2014 09:59 AM
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு இம்மாதம் 18ம் தேதி தொடங்கியது. 19 அரசுக் கல்லூரிகளில் உள்ள 2,023 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் 85 பி.டி.எஸ். இடங்களுக்கும் கலந்தாய்வு நடந்தது.
இரண்டு நாட்களிலேயே பெரும்பாலான அரசுக் கல்லூரிகளில் முக்கிய இடங்கள் நிரம்பின. அதன்பின், அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்கள், ஏழு சுய நிதி கல்லூரிகளில் இருந்து மாநிலத்திற்கு கிடைத்த 498 இடங்களுக்கும் கலந்தாய்வு நடந்தது.
முதற்கட்ட கலந்தாய்வு நேற்றுடன் முடிந்தது. 3,500 மாணவர்கள் பங்கேற்றனர். 2,521 பேர் எம்.பி.பி.எஸ்; 85 பேர் பி.டி.எஸ். இடங்களையும் தேர்வு செய்தனர். முதற்கட்ட கலந்தாய்வில் எல்லா இடங்களும் நிரம்பி விட்டன.
மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் சுகுமார் கூறியதாவது: அரசு கல்லூரிகளில் அனுமதி பெற உள்ள 175 இடங்கள், பிற சுயநிதி கல்லூரிகளில் இருந்து மாநிலத்திற்கு கிடைக்கும் இடங்களுக்கும் சேர்த்து ஜூலை 2ம் வாரத்தில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கும்.
காலியாக உள்ள இடங்கள், கலந்தாய்வு விவரங்கள் tnhealth.org என்ற,இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.