உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் திணறல்
உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் திணறல்
UPDATED : ஆக 16, 2014 12:00 AM
ADDED : ஆக 16, 2014 11:35 AM
காளையார்கோவில்: காளையார்கோவில் உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் கல்வித்துறை சார்ந்த பணிகளை செயல்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
காளையார்கோவில் ஒன்றியத்தில் 141 துவக்க, நடுநிலைப் பள்ளிகள், 480 ஆசிரியர்கள் உள்ளனர். கண்காணிப்பாளர், இடைநிலை உதவியாளர், உதவியாளர்கள், தட்டச்சர், பதிவரை எழுத்தர், அலுவலக உதவியாளர்கள் பணியிடம் நீண்ட நாட்களாக காலியாக இருந்துவருகிறது.
14 பேர் பணிபுரிந்து வந்த இடத்தில் 4 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகிறார்கள். ஆசிரியர்களுக்கு மாதச்சம்பளப் பட்டியல் தயார் செய்வது, அரியர்ஸ், பி. எப் பிடித்தம் போன்ற தினசரி பணிகளும், பள்ளிகள் குறித்த புள்ளிவிபரம் மற்றும் நலத்திட்ட விபரங்களையும், கருவூல அலுவலகத்திலும் குறிப்பிட்ட நேரத்தில் தாயார் செய்து கொடுக்க வேண்டியுள்ளது.
இங்கு சேகரிக்கும் புள்ளி விபரங்களை அனுப்பவும், கல்விதுறை சார்ந்த தகவல் மற்றும் அரசு உத்தரவுகளை தெரிந்துகொள்வதற்கு தனியார் கம்ப்யூட்டர் மையங்களை தேடிச்செல்லும் அவலநிலையில் உள்ளனர்.
ஊழியர் பற்றாக்குறை காரணமாக பணிகளை செய்யமுடியாமல் திணறி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்குமேலாக ஆசிரியர்கள் அலுவலக பணியில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்து வருகிறது. தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உதவி தொடக்ககல்வி அலுவலகத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மாவட்ட நிர்வாகம், காளையார்கோவில் உதவி தொடக்க கல்வி அலுவலகத்திற்கு ஊழியர்களை நியமிக்கவேண்டுமென ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
