தரம் உயர்த்தப்பட்டும் அவல நிலையில் செயல்படும் பள்ளி
தரம் உயர்த்தப்பட்டும் அவல நிலையில் செயல்படும் பள்ளி
UPDATED : செப் 05, 2014 12:00 AM
ADDED : செப் 05, 2014 11:40 AM
சிவகாசி: சிவகாசி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, 2011- 2012ம் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் செங்கமலப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, ஜக்கம்மாள் நகர் சுற்றுபகுதி மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர்.
9 மற்றும் பத்தாம் வகுப்புகளில் 300 மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர். கடந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்வில், இப்பள்ளி, 98.2 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களின் ஒவ்வொருவரின் பெற்றோரும், ஏதாவது ஒரு பட்டாசு, தீப்பெட்டி ஆலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களாக உள்ளனர்.
எட்டாம் வகுப்பு வரை உள்ள ஆலமரத்துப்பட்டி பள்ளி, உயர்நிலை பள்ளியானதால், 10ம் வகுப்பு வரை படிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. உயர்நிலைப் பள்ளி இங்கு உருவாகாவிட்டால், 8ம் வகுப்போடு கல்வியை முடித்து , படிக்கும் வயதில் பட்டாசு தொழிலாளர்களாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கும்.
இப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டும், கட்டட வசதி ஏதும் இல்லை. முன்னாள் எம்.எல்.ஏ., பாலகங்காதாரன், ஆலமரத்துப்பட்டியில் மூடப்பட்ட தனது தீப்பெட்டி ஆலை கட்டடத்தில் வகுப்புகள் நடத்த இலவசமாக வழங்கினார்.
இதை தொடர்ந்து இந்த பாழடைந்த தீப்பெட்டி ஆலை கட்டடத்திற்குள், மூன்று ஆண்டுகளாக 9 மற்றும் 10ம் வகுப்புகள் நடைபெறுகிறுது. மேற்கூரை தகர ஷெட்டாக இருப்பதால் காற்றோட்ட வசதி இன்றி, சுட்டெரிக்கும் வெயில் தாக்கத்தின் அவதியுடன் கல்வி கற்கின்றனர் மாணவர்கள். காலை 10 மணிக்கு மேல், கட்டடத்திற்குள் இருக்க முடியாத சூழ்நிலையில், வெளியில் உள்ள மரத்தடியில் மண் தரையில் வகுப்புகள் நடைபெறுகிறது.
முன்புறம் உள்ள தாழ்வாரம் மாட்டு கொட்டகையை விட மோசமாக உள்ளது. இங்கும் வகுப்புகள் நடந்து வருகிறது. பள்ளி கட்டடம் கட்டுவதற்கு ஊராட்சி நிர்வாகத்தால், ஊரணி புறம்போக்கு இடமான 1.50 ஏக்கர் நிலம் வழங்கினர். ஆனால் வருவாய் துறை, ஊரணி புறம்போக்கில் கட்டடம் கட்ட அனுமதிக்க முடியாது என கூறி, இதுவரை நிலத்தை கையகப்படுத்தி வழங்கவில்லை.
நிலம் வழங்காததால், பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த இடத்தை தவிர, அரசு புறம்போக்கு இடம் ஏதும் இல்லை. கிராமத்தை சுற்றி பட்டாசு ஆலைகள் செயல்படுவதால், தனியார் நிலங்கள் ஏக்கர் பல லட்சம் ரூபாய் மதிப்பில் உள்ளது. இதனால் தனியாரிடமும் இடம் வாங்க முடியவில்லை. இதனால் பாழடைந்த தீப்பெட்டி ஆலையில், பாதுகாப்பற்ற சூழ்நிலையில் கல்வி கற்க வேண்டிய கட்டாத்தில், மாணவர்கள் உள்ளனர்.
மாணவர்களுக்கு குடிநீர், கழிப்பிடம் வசதியும் இல்லை. மாணவிகள் இயற்கை உபாதை கழிக்க சிரமம் அடைகின்றனர். மதிய உணவுக்கு கூட, நீண்ட தூரத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிக்கு நடந்து சென்று சாப்பிடுகின்றனர். சமீபத்தில் இப்பள்ளி ஆய்வுக்கு வந்த கல்வித்துறை அதிகரிகள், தீப்பெட்டி ஆலையில் செயல்படும் கட்டடத்தை பார்வையிட்டு, கட்டடம் ஆபத்தான நிலையில் உள்ளது.
இங்கு பள்ளி செயல்படுவதை விரைவில் மாற்ற வேண்டும் என, ஆலோசனை வழங்கி சென்றனர். இந்த கட்டடத்தையும் மாற்றினால், வேறு எங்கு வகுப்புகள் நடத்துவது என வழி தெரியாமல், ஆசிரியர்களும், மாணவர்களும் குழப்பத்தில் உள்ளனர். மாவட்ட நிர்வாகமானது, ஏழை குழந்தைகள் படிக்கும் பள்ளியின் மீது கவனம் செலுத்தி, நிலம் வழங்கி, கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர்கள் கோருகின்றனர்.
