UPDATED : செப் 22, 2015 12:00 AM
ADDED : செப் 22, 2015 10:08 AM
தமிழகத்தில், பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி., அனுமதியுடன், அண்ணாமலை பல்கலை உட்பட, சில பல்கலைகளில், 1979 முதல் திறந்த நிலை மற்றும் தொலைதுார கல்வியில், பட்டம் மற்றம் பட்டயப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. துவக்கத்தில், இந்த முறையில் படித்து பட்டம் பெற்றவர்களுக்கு, அரசு நிறுவனங்களில், வேலைவாய்ப்பு தரப்பட்டதோடு, உயர்கல்வி கற்கவும் அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், சில ஆண்டுகளுக்கு முன், திறந்தநிலை பல்கலையால் வழங்கப்பட்ட, பிளஸ் 2 படிக்காமல், நேரடி பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது. பின், பிளஸ் 2 முடித்து, திறந்தநிலை படிப்பில், இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு மட்டும் அனுமதி தரப்பட்டது. இதனால், பிளஸ் 2 படிக்காமல், நேரடி இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள், அரசு வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்விக்கு செல்ல முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், மத்திய அரசு, இரு தினங்களுக்கு முன், புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், திறந்த நிலை பல்கலையின் பட்டப்படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள், அரசின் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்விக்கு செல்லத்தக்கவை என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பால், திறந்தநிலை படிப்பில், பட்டம் பெற்ற லட்சக்கணக்கானோர் அரசு வேலைவாய்ப்பு பெறும் வகையில், புதிய நம்பிக்கை பெற்றுள்ளனர்.
