UPDATED : செப் 18, 2024 12:00 AM
ADDED : செப் 18, 2024 09:06 AM
திருப்பூர்:
பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும், 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கான தமிழ்மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு அக்., 19ல் நடக்கிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, வரும், 19ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2022 முதல் தமிழ்மொழி இலக்கிய திறனறிவு தேர்வு, பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. நடப்பாண்டுக்கான தேர்வு வரும், அக்., 19ல் நடக்கவுள்ளது. தேர்வெழுத விரும்பும் மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற தேர்வுத்துறை இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளிலும் (சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., உட்பட) பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி பெறும் மாணவருக்கு மாதம், 1,500 ரூபாய் வீதம், இரண்டு ஆண்டுகளுக்கு (மேல்நிலைக்கல்வி முடிக்கும் வரை) ஊக்கத்தொகை வழங்கப்படும் என தேர்வுகள் துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில் வரும், 19ம் தேதிக்குள் (நாளை), அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் தேர்வு கட்டணம், 50 ரூபாய் செலுத்தி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவுறுத்தியுள்ளது.