UPDATED : நவ 06, 2024 12:00 AM
ADDED : நவ 06, 2024 09:24 AM

கோவை:
கல்லுாரி வளாகத்திற்குள் நடக்கும் தகாரறு குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காவிட்டால் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் தெரிவித்தார்.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
மாநகரில் உள்ள ஒரு சில கல்லுாரிகளில் போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. கல்லுாரி விடுதிகளில் இல்லாமல் வெளியில் அறை எடுத்து தங்கியிருக்கும் மாணவர்களில் சிலர், வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை வாங்கி, கல்லுாரி மாணவர்களுக்கு சப்ளை செய்கின்றனர்.இதை தடுக்க போலீஸ் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கல்லுாரி நிர்வாகத்தினரும் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே போதை பொருட்களின் பயன்பாட்டை முழுமையாகஒழிக்கமுடியும். கல்லுாரி வளாகத்திற்குள் நடக்கும் நிகழ்ச்சிகளின் போது மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்படுகிறது. கல்லுாரி நிர்வாகத்தினர் அவற்றை போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்.
வியாபார ரீதியாகவும், கல்லுாரியில் நற்பெயர் பாதிக்கும் எனவும் பலர் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பதை தவிர்க்கின்றனர். ஆரம்பத்திலேயே பிரச்னை குறித்து விசாரணை நடத்தினால், பெரிய குற்றம் நடப்பதை தவிர்க்க முடியும். எனவே, தங்களின் கல்லுாரி வளாகத்திற்குள் மாணவர்கள் மோதிக்கொண்டால், நிர்வாகத்தினர் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயம். அப்படி போலீசாருக்கு தெரிவிக்காமல் மறைக்கும் கல்லுாரி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.