UPDATED : நவ 21, 2024 12:00 AM
ADDED : நவ 21, 2024 11:53 AM
மதுரை:
மதுரை, பனங்காடி பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர், அருகேயுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வருகிறார்.
சில நாட்களாக அவரை சக மாணவர்கள் சிலர் கேலி, கிண்டல் செய்ததோடு அநாகரிக செயல்களிலும் ஈடுபட்டனர். இதனால் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என பெற்றோரிடம் மாணவர் கூறினார்.
அம்மாணவர்கள் குறித்து தலைமையாசிரியையிடம் தந்தையும், சித்தப்பாவும் நேரில் புகார் கூறினர். தலைமையாசிரியை அறையில் சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடந்தது. அப்போது, சித்தப்பா ஒரு மாணவனை தாக்க, ஆத்திரமுற்ற சக மாணவர்கள் அவரை கடுமையாக தாக்கினர்.
அதிர்ச்சியடைந்த தலைமையாசிரியை இருதரப்பையும் கண்டித்தார். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பள்ளிக்கு வந்த போலீசாரிடம், மாணவர்கள் கூல் லிப் பயன்படுத்துவதே இது போன்ற பிரச்னைக்கு காரணம். அதை தடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. தலைமையாசிரியை புகாரில் மாணவனின் சித்தப்பாவிடம் போலீசார் விசாரித்தனர். அவர் மன்னிப்பு கேட்டதால் புகார் வாபஸ் பெறப்பட்டது.