தேர்வும்... தேர்தலும்... செமஸ்டர் தேர்வுகளை மாற்றியமைத்தால் நிம்மதி!
தேர்வும்... தேர்தலும்... செமஸ்டர் தேர்வுகளை மாற்றியமைத்தால் நிம்மதி!
UPDATED : மார் 24, 2026 06:36 PM
ADDED : மார் 24, 2026 06:39 PM

மதுரை:
மதுரையில் காமராஜ் பல்கலைக்கு உட்பட்ட பல கல்லுாரிகளில் செமஸ்டர் தேர்வு தேதி சட்டசபை தேர்தல் ஓட்டுப் பதிவுக்கு முன், பின் இருப்பதால் தேர்வுகளை மாற்றியமைக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்பல்கலைக்கு உட்பட்டு 110 கல்லுாரிகள் உள்ளன. அரசு, உதவிபெறும் கல்லுாரிகளுக்கு பல்கலை சார்பில் செமஸ்டர் தேர்வு தேதி முடிவு செய்யப்படும். இதன்படி சட்டசபை தேர்லை மனதில் வைத்து ஓட்டுப்பதிவை பாதிக்காமல் இரண்டு வகையாக தேர்வு தேதி தயாரித்து, கன்வீனர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தன்னாட்சி, உதவிபெறும் கல்லுாரிகளில் சுயநிதி பிரிவு பாடங்களுக்கான செமஸ்டர் தேர்வு தேதி பல கல்லுாரிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த தேதிகள், ஓட்டுப் பதிவு நாளான ஏப்., 23க்கு முன் ஏப்., 22ம், ஓட்டுப் பதிவுக்கு மறுநாள் ஏப்., 24ம் நடப்பதாக உள்ளது.
தேர்வுக்கு தயாராகும் ஆர்வத்தில் ஓட்டுப் பதிவு செய்வதை மாணவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாத சூழல் ஏற்படும்.
மேலும் விடுதி மாணவர்கள் முதல் நாள் ஓட்டுப் பதிவுக்காக சொந்த ஊர் சென்று மறுநாளே தேர்வுக்கு வருவதும் சவாலாக இருக்கும்.
எனவே ஓட்டுப்பதிவை பாதிக்காத வகையில் செமஸ்டர் தேர்வு தேதியை மாற்றியமைக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பேராசிரியர்கள் கூறுகையில், 40 சதவீதம் மாணவர் விடுதியில் தங்கி படிக்கின்றனர். ஒரு நாள் இடைவெளியில் ஊருக்கு சென்று ஓட்டளித்துவிட்டு மறுநாள் தேர்வுக்கு வருவது சிரமம். பெரும்பாலான கல்லுாரிகளில் ஓட்டுப் பதிவு பூத்கள் அமைக்கப்படும்.
தேர்தல் முடிந்து மறுநாள் அறைகளை தேர்வுக்கு தயார்படுத்துவதும் சவாலாக இருக்கும் என்றனர்.
பல்கலை அதிகாரி ஒருவர் கூறுகையில், தகுதியுள்ள மாணவர் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். அதற்கேற்ப அரசு கல்லுாரிகளுக்கு முன்னெச்சரிக்கையுடன் செமஸ்டர் தேர்வு தேதி முடிவு செய்யப்படும். தன்னாட்சி கல்லுாரிகளுக்கு ஏப்., 22 முதல் 25 வரை நடத்தாமல் அதற்கு முன் அல்லது பின் தேர்வு தேதியை முடிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் குழப்பம் இருந்தால் பல்கலை கவனத்திற்கு கொண்டு வரலாம் என்றார்.

