அரவக்குறிச்சி பள்ளி மாணவர் திறனறிவு தேர்வில் வெற்றி
அரவக்குறிச்சி பள்ளி மாணவர் திறனறிவு தேர்வில் வெற்றி
UPDATED : ஏப் 03, 2026 06:32 PM
ADDED : ஏப் 03, 2026 06:34 PM
அரவக்குறிச்சி:
அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர், மத்திய அரசால் நடத்தப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவு தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
மத்திய அரசால் நடத்தப்படும், தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவு தேர்வை இந்தாண்டு, 2.5 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வு அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் அடிப்படையானது. இரண்டு தாள்களை கொண்டது. ஒன்று மனத்திறன் தேர்வு, மற்றொன்று படிப்பறிவு தேர்வாகும்.
இத்தேர்வில் தமிழ்நாட்டில் மொத்தம், 6,695 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கரூர் மாவட்டத்தில், 29 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர் முஹமது ஹாரிஸ், மாநில அளவில் (பொதுநிலையில்) 1,959வது இடமும், மாவட்டத்தில் ஐந்தாம் இடமும் பெற்றார்.
மாணவருக்கு மாதம், 1,000 ரூபாய் வீதம், 12 ஆயிரம் ரூபாய், பிளஸ் 2 முடிக்கும் வரை மொத்தம், 48 ஆயிரம் ரூபாய் அரசால் வழங்கப்படும். சிறப்பான இடம் பெற்ற மாணவரை ஊக்குவிக்கும் வகையில், தலைமை ஆசிரியர் சாகுல் அமீது, 2,000 ரூபாய் ஊக்குவிப்பு பரிசாக வழங்கினார். மேலும் சோழவரம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி, 500 ரூபாய் பரிசாக வழங்கினார்.
வெற்றி பெற்ற மாணவரை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) சண்முகவேல் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் சகுந்தலா, வரதராஜன், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர். திறன் தேர்வு தலைமை ஆசிரியரால் பயிற்சி அளிக்கப்பட்டு இது வரை, 29 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
