UPDATED : ஏப் 07, 2026 09:39 AM
ADDED : ஏப் 07, 2026 09:40 AM
சென்னை:
“படிக்காமல் யாராலும் சிறுகதை எழுத முடியாது. நிறைய விஷயங்களை படித்தால் மட்டுமே சிறுகதை எழுத முடியும்,” என, 'கலைமகள்' ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்தார்.
'கலைமகள்' மாத இதழ் சார்பில், 'கி.வா.ஜ., சிறுகதைப் போட்டி - 2026'ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா, ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி.ஆர்., கன்வென்ஷன் சென்டரில்நடந்தது.
எழுத்தாளர்கள் ஆழ்வை ஆயில்யன் என்கிற மாடசாமி, மங்களம் என்கிற கணேஷ் ராமகிருஷ்ணன், அகிலன் கண்ணன் ஆகியோருக்கு, சிறந்த சிறுகதைக்கான பரிசு வழங்கப்பட்டது.
விழாவில், 'கலைமகள்' ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் பேசியதாவது:
'கலைமகள்' இதழ் 95 ஆண்டுகளாக இடைவிடாது வெளிவந்து கொண்டிருக்கிறது. கொரோனா காலத்தில் கூட, கடவுள் அனுகிரகத்தால் கலைமகள் இதழ் வெளிவந்தது.
எழுத்தாளர் தேவிபாலா, 'கலைமகள்' குடும்பத்தைச் சேர்ந்தவர். இன்று அவர் மிகப்பெரும் உயரத்தில் உள்ளார். அவரின் முதல் சிறுகதை எங்கள் இதழில் வெளியானது.
சிறுகதைப் போட்டிக்கு, 172 சிறுகதைகள் வந்தன. அவற்றுள் 12 தேர்வு செய்யப்பட்டன. கதைகளை தேர்வு செய்ய சில நிபந்தனைகளை வைத்துள்ளோம். சிறுகதை எழுதுவதை ஊக்குவிப்பதில், 'தினமலர்' நாளிதழ் சிறப்பாக பங்காற்றுகிறது.
சிறுகதை எழுதுவதில், தேசபக்தி, தனித்துவம் வேண்டும். அடுத்தவர்களை குறித்த சீண்டல் கூடாது. விறுவிறுப்பான கதைக்களம் வேண்டும்.
சிறுகதைக்கு என ஒரு இலக்கணம் இருத்தல் வேண்டும். படிக்காமல் யாராலும் சிறுகதை எழுத முடியாது. நிறைய விஷயங்களை படித்தால் மட்டுமே சிறுகதை எழுத முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
எழுத்தாளர் தேவிபாலா பேசுகையில், “நான் 20 வயதில் எழுதிய, 'சுமங்கலி பிரார்த்தனை' என்ற முதல் சிறுகதை, 'கலைமகள்' இதழில் வெளியானது. அந்த சிறுகதைக்கு, கி.வா.ஜ., பாராட்டும், பரிசும் கிடைத்தது.
கலைமகளில், எழுத்தும் அதற்கான வரம்பும் மிக முக்கியம். அந்த படிப்பினையே, என் வாழ்வில் உயர காரணமாக உள்ளது. சிறுகதை எழுதுவது ஒரு தவம். அதை சிரத்தையுடன் செய்யுங்கள்,” என்றார்.

