UPDATED : ஏப் 22, 2026 02:20 PM
ADDED : ஏப் 22, 2026 02:23 PM

ராமநாதபுரம்:
ராமநாதபுரம் செய்யது அம்மாள் மெட்ரிக் ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. தாளாளர் ராஜாத்தி அப்துல்லா தலைமை வகித்தார்.
செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் ஷானாஸ் பாத்திமா முன்னிலை வகித்தார். ஆண்கள் பள்ளி முதல்வர் நாகலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினர் ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு, கேடயங்களை வழங்கினார்.
அவர் பேசியதாவது:
'அதிக மதிப்பெண்கள் எடுப்பது மட்டுமே கல்வியின் நோக்கம் அல்ல. மாணவர்களின் சிறப்பு தனித்தன்மைகளை வெளிக்கொண்டு வருவதே கல்வியின் நோக்கம்.
இதை மாணவர்கள் புரிந்து கொண்டு மதிப்பெண் குறைந்தால் எதிர்காலம் இல்லை என்ற நம்பிக்கையை இழந்துவிடாமல் கல்வி, பிற துறைகளில் ஆர்வம் செலுத்தி முன்னேற வேண்டும்,' என்றார்.
பெண்கள் பள்ளி முதல்வர் தேவகி, ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் பங்கேற்றனர்.

