ஊராட்சி நடுநிலை பள்ளியில் மாணவர் சேர்க்கை மும்முரம்
ஊராட்சி நடுநிலை பள்ளியில் மாணவர் சேர்க்கை மும்முரம்
UPDATED : மே 01, 2026 06:09 PM
ADDED : மே 01, 2026 06:10 PM
அரவக்குறிச்சி:
தமிழக அரசின் உத்தரவின்படி கடந்த மார்ச், 1 முதல் அரசு பள்ளிகளில் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும் உயர், தொடக்கப் நிலையில் சேர்க்கை அதிகரிக்கும் பொருட்டு, அரவக்குறிச்சி சேவியர் தெரு ஆர்.சி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு நிறைவு செய்யும் மாணவர்களை, ஆறாம் வகுப்பில் சேர்க்கும்படி தலைமையாசிரியர் சார்லஸிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
மேலும் குழந்தைகளிடம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாகுல் அமீது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கணினி, ப்ரொஜெக்டர் கொண்ட ஹைடெக்லேப் பற்றியும், குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய நான்கு வகுப்பறைகள் பற்றியும், நவீன கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது குறித்தும் எடுத்துரைத்தார். உடற்கல்வி ஆசிரியர் சங்கர், விளையாட்டு போட்டிகளில் மாவட்ட, மாநில அளவில் வெற்றி பெறுவது பற்றியும், மாடி தோட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.
பட்டதாரி ஆசிரியர் ஷகிலா பானு தேசிய வருவாய் வழி திறனறி தேர்வுக்கு பயிற்சி அளித்தல் பற்றியும், அதில் இவ்வாண்டு முஹம்மது ஹாரிஸ் என்ற மாணவர் ரூ.48 ஆயிரம் பரிசு பெற்றது பற்றியும் விளக்கினார்.
மேலும் ஆங்கில ஆசிரியை காயத்ரி, ஹைடெக் லேப் மூலம் ஆங்கிலம் கற்பித்தலை எடுத்துரைத்தார். தமிழக அரசின் உத்தரவின்படி, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

