மூன்று இடங்களில் பொறியியல் கலந்தாய்வு சேவை மையங்கள்
மூன்று இடங்களில் பொறியியல் கலந்தாய்வு சேவை மையங்கள்
UPDATED : மே 08, 2026 09:45 PM
ADDED : மே 08, 2026 09:48 PM
திண்டுக்கல்:
மாவட்டத்தில் மூன்று இடங்களில் அண்ணா பல்கலை தொழில்நுட்ப இளங்கலை, முதுகலை கல்வி சேர்க்கைக்கான சேவை மையங்கள் துவங்கப்பட்டுள்ளன.
2026 - 2027 கல்வி ஆண்டுக்கான அண்ணா பல்கலை இளங்கலை, முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்காமல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய பல்கலை அறிவித்தது. இதை தொடர்ந்து மாணவர்களுக்கு உதவ சேவை மையங்களை பல்கலை துவக்கி உள்ளது.
விண்ணப்பங்கள் பதிவு செய்ய ஜூன் 2, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய ஜூன் 6, கலந்தாய்வுக்கான சுழற்சி முறை ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்ய ஜூன் 5, சான்றிதழ் ஆன்லைனில் ஆய்வு செய்ய ஜூன் 8 - ஜூன் 20 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 29ல் தரப்பட்டியல் வெளியிட ஜூன் 30 - ஜூலை 4 வரை குறைதீர் முகாம், அதன் பின் கலந்தாய்வு நடக்க உள்ளது. இதன் தேதியை அறிவிக்காமல் உள்ளது. மாவட்டத்தில் திண்டுக்கல் எம்.வி.முத்தையா கலை அறிவியல் கல்லூரி, பழநி அருள்மிகு பழநியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, பழநி ரோடு மாங்கரைப் பிரிவு சில்வார்பட்டி அண்ணா பல்கலை என மூன்று இடங்களில் சேவை மையங்களை பல்கலை நிர்வாகம் துவக்கி உள்ளது. இங்கு காலை 09:00 முதல் மாலை 05:00 மணி வரை விண்ணப்பங்களை பதிவேற்றலாம். சந்தேகங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
எம்.வி.எம்., கல்லூரி முதல்வர் லட்சுமி கூறியதாவது:
இங்குள்ள சேவை மையத்தில் இணைப் பேராசிரியர் கிருஷ்ணவேணி, விரிவுரையாளர் ஆதிசக்தி பணியில் உள்ளனர். மாணவர்களுக்கு வழிகாட்ட, கலந்தாய்வுக்கு செல்லும் மாணவர்கள் சிரமங்களை தவிர்க்கவே அண்ணா பல்கலை சேவை மையத்தை அமைத்துள்ளது என்றார்.
