நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் துவங்கியது
நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் துவங்கியது
UPDATED : மே 17, 2026 11:53 AM
ADDED : மே 17, 2026 11:55 AM
புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் முதலாமாண்டில் உள்ள காலி இடங்கள் சென்டாக் மூலம் ஒருங்கிணைந்த முறையில் கவுன்சிலிங் நடத்தி நிரப்பப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான சென்டாக் விண்ணப்பம் ஆன்லைனில் துவங்கியது.
இதற்காக தகவல் கையேட்டை, முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் வெளியிட்டு, சென்டாக் விண்ணப்ப விநியோகத்தையும் துவக்கி வைத்தார். முதல் தகவல் கையேட்டை வளர்ச்சி ஆணையர் கிருஷ்ணமோகன் உப்பு, கல்வித்துறை செயலர் முகமது ஹாசன் அபித், சென்டாக் அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.
இந்தாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் குறித்து சென்டாக் அதிகாரிகள் கூறியதாவது:
2026-27ம் கல்வியாண்டிற்கான நீட் அல்லாத இளநிலை தொழிற்படிப்புகள், கலை அறிவியல், வணிகவியல், நுண்கலை படிப்புகளுக்கான சென்டாக் ஆன்லைன் விண்ணப்பம் www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் துவங்கியுள்ளது.
நீட் அல்லாத இளநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், சென்டாக் இணையம் வழியாக வரும் 29ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
இன்ஜினியரிங் அக்ரி
நீட் அல்லாத யூ.ஜி., தொழில் முறை படிப்புகளாக பி.டெக்., பி.ஆர்க், பி.எஸ்.சி., வேளாண்மை மற்றும் தோட்டக்கலை, பி.வி.எஸ்.சி.,(கால்நடை மருத்துவம்), பி.எஸ்.சி., நர்சிங்., பி.பி.டி., பி.எஸ்சி., துணை மருத்துவ டிப்ளமோ படிப்புகள் விண்ணப்பிக்கலாம்.
கலை அறிவியல்
ஆறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் சொசைட்டி கல்லுாரிகளில் உள்ள பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., உள்ளிட்ட இளநிலை கலை அறிவியல், வணிகவியல் படிப்புகளில் சேரவும் விண்ணப்பிக்கலாம்.
நுண்கலை...
இதேபோல் பாரதியார் பல்கலை கூடத்தில் உள்ள பி.பி.ஏ., பி.வி.ஏ., உள்ளிட்ட நுண்கலை படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
பிற மாநில மாணவர்கள் இளநிலை நீட் அல்லாத தொழில்முறை மற்றும் கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கும் பிற மாநில ஒதுக்கீடு உள்ளது. எனவே, தகுதியான பிற மாநில மாணவர்கள் இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
சுய நிதி இடங்கள்
என்.ஆர்.ஐ., மற்றும் என்.ஆர்.ஐ., ஸ்பான்சர், ஓ.சி.ஐ., விண்ணப்பதாரர்களும் நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகளில் சுய நிதி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஜோசா இடங்கள்
குறிப்பாக காமராஜர் அரசு இன்ஜியரிங் கல்லுாரியில் உள்ள பி.டெக்., இடங்கள், மகளிர் இன்ஜினியரிங் கல்லுாரி, புதுச்சேரி தொழில்நுட்ப கல்லுாரில் உள்ள ஜோசா இடங்கள், பி.எஸ்.சி., வேளாண்மை தோட்டக்கலை, கால்நடை மருத்துவம், பி.எஸ்.சி., நர்சிங், பி.பி.டி., பி.எஸ்.சி., துணை மருத்துவ படிப்புகள், பி.பார்ம்., படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
எவ்வளவு இடங்கள்?
நீட் அல்லாத தொழில் முறை படிப்புகளில் 6,490 இடங்கள், கலை அறிவியல், வணிகவியல் படிப்புகளில் 4,320 படிப்புகள் என, மொத்தம் 10,810 படிப்புகள் உள்ளன.
கடைசி வரை காத்திருக்காமல் மாணவர்கள் முடிந்தவரை முன்னதாகவே விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் கடைசி நேர பதட்டத்தை தவிர்க்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் எப்போது சென்டாக் அதிகாரிகள் கூறுகையில், 'தற்போது நீட் அல்லாத படிப்புகளுக்கும் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது.
அடுத்து நீட் மறுதேர்வு முடிந்து, முடிவுகள் வெளியானதும் எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் வரவேற்கப்படும்' என்றனர்.
