உதவி பேராசிரியர் பணியிடத்தை உயர்த்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
உதவி பேராசிரியர் பணியிடத்தை உயர்த்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
UPDATED : செப் 08, 2026 10:22 AM
ADDED : செப் 08, 2026 10:23 AM
சென்னை:
தமிழக உயர் கல்வித்துறையின், கல்லுாரி கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள, 'அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்' என, கடந்த தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.
பின், நீதிமன்ற வழக்குகள் காரணமாக, அந்த எண்ணிக்கை 2,708 ஆக குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு டிச., 27ம் தேதி, போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், உதவி பேராசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கையை 4,000 ஆக உயர்த்த வலியுறுத்தி, கவுரவ விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர் போட்டித் தேர்வு தேர்வர்கள் ஆகியோர், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கூறுகையில், “நீதிமன்ற உத்தரவை அடிப்படையாக வைத்து, உதவி பேராசிரியர் போட்டித் தேர்வு காலிப்பணியிடங்கள் எண்ணிக்கையை 4,000 ஆக உயர்த்த வேண்டும்.
ஏனெனில், கடந்த எட்டு ஆண்டுகளாக, அரசு கலை, அறிவியல் கல்லுாரிக்கு, உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படாமல் உள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர்.
