தொடர் போராட்டங்கள் நடத்த சிறப்பு பயிற்றுநர்கள் முடிவு
தொடர் போராட்டங்கள் நடத்த சிறப்பு பயிற்றுநர்கள் முடிவு
UPDATED : செப் 16, 2026 10:24 AM
ADDED : செப் 16, 2026 10:25 AM
சென்னை:
சட்டசபை தேர்தலுக்கு முன், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, சம வேலைக்கு சம ஊதியம் உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் பகுதி நேர ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், ஊராட்சி செயலர்கள், கிராம உதவியாளர்கள், துாய்மைப் பணியாளர்கள் என, பல்வேறு சங்கத்தினர், சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் அறிவிக்கபட்ட பின், போராட்டங்கள் அனைத்தும் ஓய்ந்தன. பின் த.வெ.க., ஆட்சி அமைந்தது. பட்ஜெட் கூட்டத்தொடரில் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வகையில், அறிவிப்புகள் வெளியாகும் என, அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். அவர்கள் எதிர்பார்த்த அறிவிப்புகள் எதுவும் வராததால், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாற்றுத் திறன் மாணவர்களுக்கான, சிறப்பு பயிற்றுநர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலர் காணிராஜா கூறுகையில், “தொழிலாளர் வைப்பு நிதி மற்றும் நிறுத்தி வைக்கபட்டுள்ள ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அடுத்த மாதம் தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்து உள்ளோம்,” என்றார்.
இதே போல், பகுதி நேர ஆசிரியர்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, பள்ளி காலாண்டு விடுமுறையில், தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
