தமிழ் திறனறி தேர்வில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 71 மாணவர்கள் தேர்ச்சி
தமிழ் திறனறி தேர்வில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 71 மாணவர்கள் தேர்ச்சி
UPDATED : டிச 05, 2025 07:03 AM
ADDED : டிச 05, 2025 07:05 AM
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ் மொழி இலக்கிய தேர்வில் தேர்ச்சி பெற்ற 71 மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
இது தொட ர்பாக கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு;
தமிழக அரசின் பள்ளி கல்வி துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 1 மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதாந்திர ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2025 - 26ம் கல்வியாண்டிற்கான திறனறித் தேர்வு கடந்த அக்., 11 ம் தேதி நடந்தது.
தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 70 ஆயிரத்து 508 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். இதில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் கடந்த நவ., 18 ம் தேதி வெளியானது. தொடர்ந்து தேர்ச்சி பெற்றவர்களில் ஊக்கத் தொகை பெறுவதற்கான தேர்வு பட்டியல் கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பிளஸ் 1 பயிலும் 71 மாணவர்கள் தேர்வாகி சாதனை படைத்துள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆண்டிற்கு ரூ. 16 ஆயிரத்து 500 ஊக்கத் தொகை என இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

