சென்னை சட்டக் கல்லூரி மீண்டும் திறப்பு: 80 சதவீத மாணவர்கள் வருகை
சென்னை சட்டக் கல்லூரி மீண்டும் திறப்பு: 80 சதவீத மாணவர்கள் வருகை
UPDATED : ஜன 20, 2009 12:00 AM
ADDED : ஜன 20, 2009 12:56 PM
சென்னை:
மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் மூடப்பட்ட சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி ஜன. 19ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.
சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் கடந்த ஆண்டு நவ.,12ல் இரு தரப்பினருக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டது. போலீசார் கண் முன் மாணவர்கள் நடத்திய கொலை வெறியாட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் மூன்று மாணவர்கள் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து கல்லூரி இழுத்து மூடப்பட்டது.
இதனிடையே, தேர்வுகள் நடத்துவதற்காக கல்லூரியை திறக்க ஐகோர்ட் அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 10ம் தேதி முதல் ஜன., 10ம் தேதி வரை தேர்வுகள் நடந்தன. கைதான மாணவர்களும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதன்படி, கடந்த நவ., 13ல் இழுத்து மூடப்பட்ட சட்டக் கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மூன்றாண்டு சட்டப் படிப்புக்கான வகுப்புக்கள் மட்டுமின்றி, ஐந்தாண்டு சட்டப் படிப்பு முதலாம் ஆண்டு வகுப்புக்கள் 19ம் தேதி காலை துவங்கின. இதில் 1,200 மாணவர்களுக்கு 800 மாணவர்கள் வரை பங்கேற்றனர்.
பிற்பகலில் இரண்டாம் ஆண்டுமுதல் ஐந்தாம் ஆண்டு வரையிலான வகுப்புகள் துவங்கின. இதில் 902 மாணவர்களில் 750 மாணவர்கள் வரை பங்கேற்றதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. துவக்க நாளில் 80 சதவீதத்திற்கும் மேலான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
