UPDATED : ஜன 24, 2012 12:00 AM
ADDED : ஜன 24, 2012 12:59 PM
பெற்றோரின் தியாகத்துக்கு பரிகாரமாக, மாணவர்கள் நன்றாக படித்து பல சாதனைகள் புரிந்து உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என கருத்தரங்கில் சி.இ.ஓ., குமார் பேசினார்.
தமிழ்நாடு அரசுபள்ளிக் கல்வித்துறை மற்றும் பாவை கல்வி நிறுவனம் சார்பில் "வெற்றி நமதே" என்ற தலைப்பில், அரசு பள்ளியில் படிக்கும் எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான கருத்தரங்கு ராசிபுரம் பாவை கல்லூரி நிறுவனத்தில் நடந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார் தலைமை வகித்து பேசியதாவது:
ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறந்து வருகிறோம். சாதாரண மனிதனுக்குத் தான் ஆண்டுக்கு ஒரு முறை பிறந்தநாள் வரும். சாதிக்கப் பிறந்தவனுக்கு, தினந்தோறும் பிறந்த நாள்தான்.
வாழும் போது சாதித்தால் தான், அவனுக்கு முகவரி இருக்கும். பெற்றோர்கள், தனக்கு கிடைக்காததெல்லாம், தன் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அனைத்து கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு, பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர். அந்த தியாகத்துக்கு பரிகாரமாக, மாணவர்கள் நன்றாக படித்து, பல சாதனைகள் புரிந்து மிகவும் உயர்ந்து நிலையை அடைய வேண்டும். அதற்கு, பெற்றோர்களை வணங்க வேண்டும்.
அவர்களை அடுத்து பெற்றோராக மதித்து வருபவர் ஆசிரியர்கள் தான். எனவே ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாணவர்கள் நன்றாக படித்து மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறவேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் குணசேகரன், கல்லூரி நிர்வாகத்தினர், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.
