இடம்பெயர்ந்தோர் குழந்தைகளின் கல்வியில் முன்னேறுகிறது தமிழகம்?
இடம்பெயர்ந்தோர் குழந்தைகளின் கல்வியில் முன்னேறுகிறது தமிழகம்?
UPDATED : நவ 03, 2014 12:00 AM
ADDED : நவ 03, 2014 03:36 PM
சென்னை: அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி என்ற சாதனையை தமிழகம் இன்னும் படைக்காமல் இருக்கலாம்; ஆனால், தமிழகத்தில் வாழும் இடம்பெயர்ந்தோரின் குழந்தைகளில், 95% பேர், தங்களுக்கு ஏற்ற வகுப்புகளில் சேர்ந்து படிக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
இதுகுறித்து சர்வ சிக்சா அபியான் மேற்கொண்ட சர்வேயில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில், இடம்பெயர்ந்து வாழ்வோரின் குழந்தைகள் என்ற கணக்கில், மொத்தம் 5,294 பேர்(கடந்த ஆகஸ்ட் 31 வரை) உள்ளனர். அவர்களில், 95% பேர், தங்களுக்கேற்ற வகுப்புகளில் சேர்ந்து, பள்ளிகளில் படிக்கின்றனர்.
தமிழகத்திலேயே, காஞ்சிபுரம் மாவட்டத்தில்தான், அதிகளவாக 1,118 இடம்பெயர்ந்த குழந்தைகள் உள்ளனர். அவர்களில், 983 பேர் பள்ளி செல்கிறார்கள். அதற்கடுத்து, கோவை மாவட்டத்திலுள்ள 877 பேரில், 876 பேர் பள்ளியில் சேர்ந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தின் 762 குழந்தைகளில், 696 பேரும், சென்னை மாவட்டத்தின் 274 பேரில், 241 பேரும் பள்ளிக்கு செல்கின்றனர்.
இடம்பெயர்ந்தோர் குழந்தைகளை, பள்ளியில் சேர்க்கும் முயற்சிகளில், அரசுசாரா அமைப்புகளுடன் இணைந்து, தமிழகம் சிறப்பான முறையில் செயல்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், மேலே குறிப்பிடப்பட்ட எண்ணிக்கை நம்பக்கூடியதாக இல்லை என்று சில சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். "இடம்பெயர்ந்தோரின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் விஷயத்தில், மாநில ஏஜென்சிகள் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது" என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில், வேறு மாநிலங்களிலிருந்து வந்து குடியேறுபவர்களை, கூடிய விரைவில் பதிவுசெய்தல் மற்றும் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் போன்றவை தொடர்பான உறுதியான கொள்கைகள் தமிழகத்தில் இல்லை என்பது அவர்களின் வாதம். மேலும், இங்குமங்கும் மாறிக்கொண்டே இருக்கும் ஒரு கூட்டத்தில், சரியாக கணக்கெடுப்பது என்பது சிரமமான காரியம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
UNICEF அமைப்பு தனது ஆலோசனையாக கூறுவதாவது: இடம்பெயர்தலை எளிதாக்கும் பணியை திட்டமிட மற்றும் ஒன்றிணைக்க, மாவட்டங்களில் கூட்டு நடவடிக்கை குழுக்களை அமைத்தல் வேண்டும். இதுதவிர, பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும், இடம்பெயர்ந்தோரின் குழந்தைகளை கண்டறிந்து, அவர்களுக்கு கல்வியளிக்கும் பொறுப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

